இயக்குனர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
- எந்திரன் திரைப்பட கதை திருட்டு புகார் – உச்சநீதிமன்றம் அதிரடி
- வழக்கு விசாரணைக்கு தடை கோரிய இயக்குனர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
- இயக்குனர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
டைரக்டர் ஷங்கருக்கு எதிரான “எந்திரன்” கதை திருட்டு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி இயக்குனர் சங்கரின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இயக்குநர் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
1996 ஆம் ஆண்டு “இனிய உதயம்” தமிழ் பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் எழுதிய “ஜுகிபா” கதை வெளியானது. அதே கதை மீண்டும்” தித்திக் தீபிகா “என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “எந்திரன்” திரைப்படம் வெளியானது.
அதன் பின்னர் தான், ஜுகிபா கதை எடுக்கப்பட்டு எந்திரன் திரைப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து எழுத்தளார் ஆரூர் தமிழ்நாடன் எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் டைரக்டர் சங்கர் இருவருக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார்.
அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் எந்திரன் திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கர் மீதும், படத்தின் தயாரிப்பாளரான கலாநிதிமாறன் மீது காப்புரிமை சட்டப்படி புகார் அளித்திருந்தார்.
1996 இல் தாம் எழுதிய கதையை திருடி எந்திரன் எனும் திரைப்படத்தை எடுத்து விட்டு கோடிக் கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் என்றும், இந்த வழக்கில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் புகார் கொடுத்திருந்தார்.
இந்தப் புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போலீசார் இறுதியில் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இதனால் எழும்பூர் 13 வது நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தனிப்பட்ட முறையில் கிரிமினல் வழக்காக இயக்குனர் ஷங்கர் மீதும், தயாரிப்பாளரான கலாநிதி மாறன் மீதும் தொடுத்திருந்தார் .
அந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட இருவரும் எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் ஆஜராகும்படி 2011ல் சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனை அடுத்து இயக்குனர் ஷங்கரும் கலாநிதி மாறனும் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு சட்டப்படி செல்லாது என்றும், நாங்கள் கதையை திருடவில்லை என்றும் கூறி உத்தரவிட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் 6 .6.2019 அன்று நீதிபதி புகழேந்தி வழங்கிய தீர்ப்பில்,
கலாநிதி மாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது. கதை ஒரே மாதிரி உள்ளது… என்று கூறி, கதைக்கும் சினிமாவுக்கும் உள்ள 16 ஒற்றுமைகளை பட்டியலிட்டு அதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாக தெரிகிறது அதனால் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட சங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம் என்று உத்தரவிட்டது.
மேலும் கூடுதல் அம்சமாக இயக்குனர் சங்கர் பிரபலமானவர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது அங்கு கூட்டம் கூடுவது மற்றும் அலுவலக இடையூறுகள் ஏற்படும் என்பதால் நீதிமன்றத்திற்கு தேவைப்படும்போது மட்டும் அவர் ஆஜரானால் போதும்… எல்லா வாய்தாவிற்கும் அவர் ஆஜராக தேவையில்லை என்றும் கூறியது.
இதை அடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்க இருந்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இயக்குனர் சங்கர் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சார்பாக மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், வழக்கறிஞர் டாக்டர்.ராம் சங்கர் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் R.F. ,நரிமன், நவீன் சின்கா, K.M. ஜோசப் ஆகிய மூன்று பேர் அடங்கிய பெஞ்ச் இயக்குனர் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இது இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் விரைவில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.