பிகில் இசை வெளியீட்டு விழாவில் கட்டுப்படுத்த இயலாத வகையில் ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி!
இன்று இரவு ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசுவார் என்பதுதான் கோலிவுட்டு முதல், தமிழக அரசியல் களம் வரை சுடச் சுடப் பேசப் படும் செய்தி. விஜய் தனது அரசியல் அஸ்திவாரத்தை இன்னும் பலப்படுத்துகிறாரா அல்லது அமைதிகாக்கிறாரா என்பது இன்று இரவு தெரிந்துவிடும்!
வரிசையாக சர்ச்சைகளை ஏற்படுத்தினால் மட்டுமே திரைப்படங்கள் தியேட்டரில் ஓடும் என்ற நிலைக்கு தற்போதைய தமிழ்த் திரையுலகம் வந்துவிட்டது. மெர்சல், சர்கார் என நடிகர் விஜய்யும் இந்த உத்தியில் இருந்து மீளவில்லை. ஏதாவது அரசியல் ரீதியாக, மத ரீதியாக சீண்டினால், அதற்கு எழும் எதிர்ப்பின் அடிப்படையில் இலவச விளம்பரம் கிடைத்து படம் எப்படியாவது சூட்டோடு சூடாக ஓடிவிடும் என்று கணக்கிட்டு படத்தை எடுத்துவருகிறார்கள் என்கின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.
சமூகத் தளங்கள், மொபைல் ஆப்கள், டிவி., ஊடகங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓடுவதே பெரும்பாடாகி வருகின்றன.
இந்நிலையில், கடந்த வருடம் `சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதைப் போல், இன்று இரவு ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் நடிகர் விஜய் என்ன பேசப் போகிறார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, எதிர்பாளர்களோ, விஜய் இன்று என்ன ஏழரையைக் கூட்டப் போகிறார் என்று முணுமுணுக்கிறார்கள்.
ஜெயலலிதா, கருணாநிதி என தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகள் அகன்றுவிட்ட நிலையில், கிடைத்த வெற்றிடத்தை நிரப்ப சினிமா நடிகர்களுக்கு இடையே போட்டா போட்டி நடக்கிறது.
ஒருபுறம் ரஜினி போக்குக் காட்டிக்கொண்டிருக்க, கமல் ஹாசனோ களத்தில் இறங்கி ஓரளவு வாக்குகளையும் அள்ளியிருக்கிறார். அதே நேரம், விஷாலுக்கு வந்த ஆசை, ஆர்.கே.நகருடன் வாலறுந்து போக, தொடக்கம் முதலே தன் மகனை சினிமாவில் நடிக்க வைத்து, இளைஞர்களின் ஆதரவுடன் அரசியல் களத்தில் குதிக்க வைத்து, தமிழகத்தின் முதலமைச்சர் ஆக்கி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசியலை சினிமாவின் வழியே நடத்திக் கொண்டிருக்கும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் இத்தனை வருட உழைப்பு அதி தீவிர உழைப்பு இப்போது வெளித் தெரிந்திருக்கிறது.
சமூகத்தை கவனிப்பதை விட, அரசியலையே அதிகம் பேசி வருகிறார் விஜய். இப்போது அவருக்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறார் நாம் தமிழர் சீமான்… இன்றைய இசை வெளியீட்டு விழாவில் என்ன பேசுகிறார் என்பதைப் பொறுத்து அடுத்த கட்ட நகர்த்தல் தமிழக அரசியலில் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.