இந்த விஷயத்தில் சொன்னதை செய்துள்ளார் ரஜினி காந்த். விருகம்பாக்கம் வெங்கடேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தரை தளத்தில் சினிமா கதாசிரியர் கலைஞானத்திற்கு 3 படுக்கை அறை உள்ள வீடு வாங்கி தந்துள்ளார். புதிய வீட்டில் ரஜினி காந்த் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
தேவர் ஃபிலிம்ஸ் கதை இலாகாவில் பணியாற்றி வந்தார் கலைஞானம். அவரிடம் ‘நீ தனியா படம் பண்ணு… உனக்கு ஃபைனான்ஸ் ஏற்பாடு பண்ணித் தர்றேன்…’ என்றார் தேவர். அதனால் ‘பைரவி’ படத்தை ரஜினியை கதாநாயகனாக வைத்து தொடங்கினார் கலைஞானம். ஆனால் தேவரோ ஜெய்சங்கரை ஹீரோவாகப் போட்டு படம் செய்ய எண்ணினார். அதற்கு கலைஞானம் ஒத்துவரவில்லை. அதனால் தான் சொன்னபடி இல்லாமல் பின்வாங்கினார் தேவர். இருப்பினும், கலைஞானம் எப்படியோ சமாளித்து படத்தைக் கொண்டு வந்தார். அங்கிருந்து தொடங்கியது, ரஜினியின் ஹீரோ மவுசு!
கடந்த ஆகஸ்ட் 14 அன்று, கலைஞானத்தின் கலைச் சேவையைப் பாராட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய சிவக்குமார், “கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார்” என்றார்.
அப்போது மேடையில் இருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியபோது… “கலைஞானத்திற்கு அரசு சார்பில் வீடு தரப்படும்” என்றார்.
ஆனால், பின்னர் பேசிய ரஜினி தனது பேச்சின்போது… “ஸாரி… கலைஞானம் அவர்கள் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்ங்கிறது எனக்கு இப்பத்தான் தெரியும். ‘நல்லாருக்கீங்களா?’னு கேட்டா… ‘நல்லா இருக்கேன்’னு சொல்லுவார். வெள்ளைவேட்டி சட்டையில பளிச்சுனு சிரிச்ச முகமா இருக்கிற அவரைப் பார்க்கும் போது… அவர் கஷ்டப்படுற மாதிரி தோணாது. அழுத குழந்தைக்குத்தான் தாய்கூட பால் கொடுப்பா. கலைஞானம் என்கிட்ட கேட்டிருக்கணும். பத்து படமாவது அவருக்கு நான் செய்து கொடுத்திருக்கணும். கலைஞானத்துக்கு வீடு கொடுக்கிற வாய்ப்பை நான் அரசாங்கத்துக்கு தரமாட்டேன்… நானே வாங்கித் தருவேன். இன்னும் பல்லாண்டு காலம் கலைஞானம் நலமுடன் வாழணும்” என்றார் ரஜினி.
இதை அடுத்து, அது ஏதோ ஒரு சம்பிரதாயமான விழாப் பேச்சாக அமையாமல், உண்மையாகவே களத்தில் இறங்கிவிட்டார் ரஜினி.
விழாவில் பேசிய மறுநாளே வீடு வாங்குவதற்கான தொகைக்கு செக் போட்டு ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் கொடுத்துவிட்டுத்தான் ‘தர்பார்’ படப்பிடிப்பிற்குச் சென்றார் ரஜினி.
கடந்த 5.10.2019 வெள்ளியன்று… அமுதினி ஃபிளாட்ஸ், 34 விநாயகம் தெரு, வெங்கடேசன் நகர், விருகம்பாக்கம், சென்னை முகவரியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் 1320 சதுரடியில் மூன்று படுக்கை அறைகளும், இரண்டு கார் பார்க்கிங்களும் கொண்ட வீடு வாங்கப்பட்டது.
அக்.07 இன்று காலை 10 மணிக்கு தான் வாங்கிக் கொடுத்த புது வீட்டுக்கு ரஜினி வந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் கலைஞானம்.
பூஜையறையில் குத்துவிளக்கு ஏற்றினார் ரஜினி. கூடவே பாபா படம் ஒன்றையும் பரிசளித்தார். அதன் பின் ரஜினிக்கு மில்க் ஸ்வீட் தரப்பட்டது. அதைச் சாப்பிட்டபின் கலைஞானம் தன் குடும்பத்தினரை ரஜினிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பிறகு வீட்டைச் சுற்றிப் பார்த்த ரஜினி… “வீடு தெய்வீகமா இருக்கு” என மகிழ்ச்சி தெரிவித்தார். அதன் பின் விடைபெற்றுச் சென்றார் ரஜினி.
இது குறித்து கலைஞானம் கூறிய போது, “வீடு வாங்கிக் கொடுத்தார்… விளக்கும் ஏற்றி வைத்தார்; அது தான் நம் தலைவர் என்றார்!