இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சினிமா தொழிலில் இருக்க வேண்டிய பாதுகாப்பு இல்லை என இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் லைக்கா நிறுவனம் ரூ.2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.
இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் தான் நூலிழையில் உயிர் பிழைத்ததாக நடிகர் கமல்ஹாசன் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்குகிறேன். உயிரிழந்தவர்களுக்கு இந்த இழப்பீடு போதாது. என் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பாகவே இதை கருதுகிறேன். கிரேன் விபத்து நடந்த 4 நொடிகளுக்கு முன்பு தான் இயக்குனர் அங்கிருந்து நகர்ந்து சென்றார். கிரேன் விழுந்த கூடாரத்தின் அடியில்தான் நானும், கதாநாயகியும் இருந்தோம். நான் இரண்டு அடி நகர்ந்து இருந்தால் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டேன். நூலிழையில் உயிர் தப்பினேன். சினிமாவில் கடைநிலை ஊழியனுக்குக் கூட பாதுகாப்பும், காப்பீடும் கொடுக்க வேண்டியது கடமை என்றார்.
முன்னதாக, ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி., பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. படத்தின் பாடல் காட்சிக்காக, பிரமாண்ட அரங்கு அமைக்கும் பணியின் போது புதன் கிழமை நேற்று இரவு ராட்சத கிரேன் ஒன்று அறுந்து விழுந்தது. இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.