சமூக விலகலைக் கடைபிடிக்க முடியவில்லை
பிரபல நடிகையின் மகள், இங்கிலாந்தில் சிக்கித் தவிப்பது இப்போது தெரிய வந்துள்ளது. பிரபல நடிகை ஜெயமாலா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
கன்னட நடிகையான இவர், தமிழில், பூக்காரி (1973), ஜம்போ, பாமா ருக்மணி, கண் சிவந்தால் மண் சிவக்கும், படிக்காத பண்ணையார், என் பொண்டாட்டி நல்லவ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இவரது மகள் சவுந்தர்யா. இவரும் நடிகைதான். கன்னடத்தில் காட்ஃபாதர், பாரு ஒய்ஃப் ஆப் தேவதாஸ், சிம்மாத்திரி ஆகிய படங்களில் நடித்தார். பிறகு நடிக்காமல் இருந்த அவர், இங்கிலாந்தில் உள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி படித்து வருகிறார். இதற்காக அங்கு சென்றிருந்த அவர், இப்போது கொரோனா காரணமாக, இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். சக மாணவிகளுடன் அவர் தங்கியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: கொரோனா பீதி உலகம் முழுவதும் பரவியதை அடுத்து, மார்ச் 22 ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்தை இந்தியா நிறுத்த உள்ளதாக எங்களுக்கு 21 ஆம் தேதி கூறப்பட்டது. உடனடியாக கடைசி விமானத்தில் துபாய் வழியாக பெங்களூர் செல்ல புறப்பட்டோம். துபாய் வந்து இறங்கினோம்.
அப்போது இங்கிலாந்தில் வரும் மாணவர்களை அனுமதிக்க இந்தியா மறுத்துவிட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரிய்வில்லை. விமான நிறுவனங்களால் எங்களுக்கு உதவ முடியவில்லை. லண்டன் திரும்பிச் செல்வதற்கான டிக்கெட் கட்டணமும் அதிகமாக இருந்தன. தூதரகம் எங்களை மீட்பதற்காகக் காத்திருந்தோம்.
ஆனால், துபாய் விமான நிலையத்தில் சமூக விலகலைக் கடைபிடிக்க முடியவில்லை. கடுமையானக் கூட்டம். பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பலர் தவித்தபடி இருந்தனர். அது ஏதோ அகதி முகாம் மாதிரி இருந்தது. ஒரு நாள் முழுவதும் அங்கு தூங்காமல் இருந்தோம். பின்னர் தூதரகம் எங்களுக்கு உதவ வந்தது. லண்டனுக்குத் திரும்பி செல்ல அறிவுறுத்தப்பட்டோம்.
அதன்படி லண்டனுக்குத் திரும்பினோம். இப்போது குவைத்தை சேர்ந்த தோழி ஒருவர், சாப்பாட்டுக்கும் மற்ற விஷயங்களுக்கும் உதவிக் கொண்டிருக்கிறார். மாணவர்கள் நாங்கள் வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி இருக்கி எங்கள் நிலமைகளை பேசி வருகிறோம். என் அம்மா இதுபற்றி பீதி அடைந்திருக்கிறார். முதலிலேயே அவர் என்னை ஊருக்குத் திரும்பும்படி கூறியிருந்தார். அதற்குள் நிலைமை இப்படி ஆகிவிட்டது’ என்று கூறியுள்ளார்.