பிரபல பாடகி ஜானகி நலமுடன் உள்ளார் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாடகி ஜானகி மகன் முரளி கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.
அறுவை சிகிச்சைக்குப்பின் அம்மாவின் உடல்நிலை சீராக உள்ளது. அம்மாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என்று ஜானகி மகன் முரளி கிருஷ்ணா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
82 வயதாகும் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி திரையுலகில் தனி இடம் பிடித்தவர். 60 ஆண்டுகளாக சினிமாவில் பாடி வந்தவர். 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார்.
தற்போது வயது மூப்பு காரணமாக சினிமா மற்றும் மேடைகளில் பாடுவதை நிறுத்திக் கொண்டார். ஹைதராபாத்தில் வசித்து வரும் இவரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது சில தவறான தகவல்கள் உலா வரும். அப்படித்தான் இப்போதும் அவரைக் குறித்து ஒரு தவறான செய்தி வதந்தியாக சமூகத்தளங்களில் உலா வந்தது.
இந்தத் தகவல் குறித்து மறுத்துள்ள ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா, ”அம்மாவுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை ஒன்று நடந்துள்ளது. தற்போது அவர் உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது. தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம், அம்மா நலமாக உள்ளார்” என்று கூறியுள்ளார்.