பிரசவ வலி என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுஜென்மம் என்றும் அதனால் அம்மாவை தெய்வத்துடன் ஒப்பிடுவது தவறே இல்லை என்றும் நடிகை சினேகாவின் கணவரும் நடிகருமான பிரசன்னா கூறியுள்ளார்.
கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ டி.வி. நிகழ்ச்சியில் பிரசன்னா- சினேகா காதல் தம்பதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரசன்னா பெண்கள் குறித்தும் தாய்மை குறித்தும் கூறியதாவது:
‘சினேகாவுக்கு பிரசவவலி ஏற்பட்டபோது எனக்கு பெண்கள் மீதான மரியாதை மிகவும் அதிகரித்தது. பிரசவ வலியை பார்ப்பதற்கே எனக்கு பயமாக இருந்தது. சினேகாவுக்கு இயற்கையான பிரசவ வலி அறிகுறி ஏற்படவில்லை. எனவே, வலியை அதிகரிக்க ஊசி போட்டார்கள்.
முதலில் சினேகாவை தொட்டு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன். டாக்டர் பெரிய ஊசியை எடுத்ததை பார்த்ததும் எனக்கு தலை சுற்ற தொடங்கிவிட்டது. டாக்டரம்மா நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஓரமாக சென்று உட்கார்ந்து கொண்டேன்.
இப்போதும், எனக்கு தலைவலி வரும்போது எல்லாம் இதைத்தான் நினைப்பேன். தலைவலியையே தாங்க முடியவில்லையென்றால் அந்த பிரசவ வலி எப்படி இருக்கும்? ஒவ்வொரு அம்மாவும் தெய்வம். அம்மாவை தெய்வத்துடன் ஒப்பிடுவது தவறே இல்லை” இவ்வாறு நடிகர் பிரசன்னா கூறினார்.