சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் முதல் காட்சியை நடிகர் சிம்பு தனது ரசிகர்களுடன் பார்த்தார்.
சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம்தான் சிம்புவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வந்தா ராஜாவாதான் வருவேன்.. இது இன்று வெளியானது.
சென்னையில் காலை 5 மணிக்கு படத்தின் முதல் காட்சி சென்னை ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்ட போது நடிகர் சிம்பு, நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்தனர்.
அப்போது திரையரங்கு முன் திரண்டிருந்த ரசிகர்கள் பேனர்கள் வைத்தும், சிம்பு கட் அவுட்க்கு பால்ஊற்றியும் பட்டாசு வெடித்தும் நடனம் ஆடியும், மலர் தூவியும் உற்சாகமாக கொண்டாடினர்.
தமது கட்அவுட்களுக்கு பால்ஊற்ற வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்திருந்த போதும், சிம்பு ரசிகர்கள் அண்டாக்களில் அல்லாமல் நாலைந்து பாக்கெட்களில் கொண்டு வந்து பாலை பீய்ச்சி அடித்து ஊற்றி மகிழ்ந்தனர். வழிந்தோடிய பாலை தெரு நாய் ஒன்று வெகுநேரம் சுவைத்துக் குடித்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.