கடந்த வாரம் ஹைதராபாத் சின்னத்திரை வட்டாரங்களில் அதிர்வலையை ஏற்படுத்திய 21 வயதே ஆன ஜான்ஸி என்ற சின்னத்திரை நடிகையின் தற்கொலைச் சம்பவத்தில் அவரது காதலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜான்சி, தன் எலரெட்டி குட்டா அடுக்குமாடி குடியிருப்பில் மின்விசிறியில் தூக்கு போட்டி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணத்தை அவர் குறிப்பிடாததால் அவரது ஐபோன் மற்றும் சாம்சங் போன் ஆகியவற்றை போலீஸார் சோதித்து வருகின்றனர். அவரது ஐபோன் லாக்கை எடுக்க முடியாததால் அவரது சாம்சங் போனை சோதித்தனர். அதில், சூர்யா என்ற இளைனஞருடன் ஜான்ஸி அடிக்கடி பேசியது தெரியவந்துள்ளது.
ஜான்ஸியின் போன் கால் ஹிஸ்ட்ரியில் சூர்யாவின் எண்ணைக் கண்டறிந்து போலீஸார் சூரியாவிடம் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது சூர்யா கூறுகையில், ‘எனக்கு ஜான்ஸியை 10 மாதங்களாகத்தான் பழக்கம். இருவரும் காதலித்தோம். என் தங்கை திருமணம் முடிந்ததும் எங்கள் காதல் குறித்து என் வீட்டில் பேச இருந்தேன். ஜான்ஸியை என் தோழி என என் தாயாரிடம் அறிமுகப்படுத்தினேன். அப்போது என் தாயார் எனக்கு பெண் பார்த்து வருவதாக ஜான்ஸியிடம் கூறினார். இதனால் ஜான்ஸி மனம் வருத்தம் அடைந்தார். கடந்த இரு நாட்களாக என் போன் காலுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. பின்னர் நான் வேலையில் மும்முரமாக இருந்ததால் ஜான்ஸியின் அழைப்பை ஏற்க முடியவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அவரை நான் ஏமாற்றவில்லை’ என்று கூறியுள்ளார்.
ஆனால் ஜான்ஸியின் தாய் அன்னபுராவிடம் போலீஸார் விசாரித்தபோது, ஜான்ஸி தான் சம்பாதித்த பணத்தில் சூர்யாவுக்கு ரூ.1.3 லட்சம் மதிப்பில் இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததாகவும் திருமணத்துக்குப் பின்னர் நடிப்பைக் கைவிட வேண்டும் என்று சூரியா வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். இதனால் மனமுடைந்த ஜான்ஸி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தான் நினைப்பதாக அவர் கூறினார். மேலும் ஜான்ஸி தங்க ஆபரணங்களை சூர்யாவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் தெரியவந்தது.
இதை அடுத்து சூரியா எதையோ மறைக்கிறார் என்று போலீஸாருக்கு தெரியவந்தது. இதனால் சூர்யாமீது இபீகோ 306, 417 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.