இந்து மதத்தை அவமதித்து விட்டதாக இயக்குனர் ஜமீல், நடிகை ஹன்சிகா மீதான புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹா படத்தின் போஸ்டர்களில், காசி நகரின் பின்னணியில் காவி உடையணிந்த பெண் துறவியாக இருக்கும் ஹன்சிகா, புகைப்பிடிப்பது போல காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த போஸ்டர் இந்து மத உணர்வுகளையும், பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறியுள்ள இந்து மக்கள் முன்னணி அமைப்பாளர் நாராயணன், தாம் அளித்த புகார் தொடர்பாக படத்தின் இயக்குனர் ஜமீல், நடிகை ஹன்சிகா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஜி.கே.இளந்திரையன், புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.