கொரோனாவை காரணமாக வைத்துக் கொண்டு அரசு மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் நடத்துகிறது. குறிப்பாக மின் துறை கடந்த 2 மாதங்களாக வீடுகளுக்கான மின் உபயோக கணக்கீட்டிற்க்காக ரீடிங் எடுக்க வரும் கணக்காளர்கள் அதற்கான அட்டையில் பயனீட்டு யூனிட் மற்றும் தொகையைக் குறிப்பிடுவதில்லை. மாறாக குறிப்பிட்ட தேதிக்குள் மின் கட்டண வசூல் மையத்தில் சென்று கேட்டு மின் கட்டணத்தைச் செலுத்தச் சொல்லுகிறார்கள்.
அதன்படி மின்கட்டண வசூல் மையம் சென்றால் அதிர்ச்சியடையும் வகையில் மிரட்டுகிறார்கள். உதாரணமாக கடந்த ஜனவரி மாதம் மின் கட்டணம் ரூ390, மார்ச் மாதம் ரூ.420 மின் கட்டணம் செலுத்திய பெத்தானியா புரத்தைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு இந்த மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2200 செலுத்த வேண்டும் என அதிர்ச்சியூட்டும் தொகையை கூறியுள்ளார்கள்.
அதிர்ச்சியடைந்த அவர் சார் கடந்த ஒன்றரை வருடங்களாக அதிக பட்சம் ரூ.500 வரை செலுத்தியுள்ளேன் தற்போது எப்படி ரூ.2200 என்று கேட்டால் அது தான் உங்களுக்கான மின் கட்டண தொகை என்று அதிரடியாக கூறுகிறார்.
தாங்கள் ரீடிங் எடுக்க வரும் போது ஏன் அட்டையில் பயனீட்டு அளவு மற்றும் தொகை குறிப்பிடவில்லை என்று கேட்டால் மின் அட்டை மூலம் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி விடுவாராம்.
அப்படியானால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குச் சென்று ரீடிங் எடுப்பதால் மட்டும் இவருக்கு கொரோனா தொற்று ஏற்படாதா? கொரோனாவை காரணமாக வைத்து இவர்கள் மக்களிடமிருந்து கொள்ளையடிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளனர்.
ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலேயே இருப்பதனால் மின் கட்டணம் சற்று உயரலாம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். ஆனால் இப்படி 4 மடங்கு உயர்வது என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இவர்கள் மின் பயனீட்டு அட்டையில் கடந்த முறை எடுத்த ரீடிங், இந்த முறை உள்ள ரீடிங் இவற்றை கணக்கில் கொண்டு தான் பயனீட்டு அளவு, தொகை இவற்றை அட்டையில் குறிப்பிட வேண்டும்.
இவை எதையும் மேற்கொள்ளாமல் இவர்கள் சொல்லும் தொகையை செலுத்த வேண்டும் என்று கூறினால் எந்த அடிப்படையில் நியாயம். கேட்டால் மக்களுக்கான அரசு என்று பிதற்றுகிறார்கள். மக்களிடமிருந்து கொள்ளையடிப்பது தான் மக்களுக்கான அரசா?
அட்டையில் உள்ளபடி ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்ச தொகையே கடந்த மாதங்களில் வந்துள்ளது ஆனால் வில்லியம் என்பவருக்கு ரூ.4800ம், சாரதாம்பாள் என்பவர் வீட்டிற்கு 2400 மின்கட்டண தொகையாக வந்துள்ளது. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்!
- செய்திக் கட்டுரை: ரவிச்சந்திரன், மதுரை