கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே 1ஆம் தேதி முதல் கோயம்பேடு வணிக வளாகம் மூடப்பட்டது. அங்கே வியாபாரம் செய்து வந்த பழ வியாபாரிகளில் சிலர் மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சந்தையில் வியாபாரத்தை நடத்தி வருகின்றனர்.
வியாபாரிகளில் சிலர் நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையிலும், வீட்டுத் தனிமைப் படுத்ததிலும் இருந்து வருகின்றனர். இதன் காரணமாகவும், முற்றிலும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்ட காரணத்தாலும் பெரும்பாலும் பலரும் கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள தங்கள் கடைகளுக்குச் செல்லவில்லை என்று கூறுகின்றனர். .
இந்த நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி சமூக விரோத கும்பல்கள் கடைகளின் பூட்டை உடைத்து பழங்களை பதப்படுத்த பயன்படும் ரூ.150/ மதிப்புள்ள ‘பிளாஸ்டிக் டிரே’க்களை அள்ளிச் செல்கின்றனர். மேலும், பழங்களை விற்பனைக்கு அடுக்க பயன்படும் அட்டைப் பெட்டிகளையும் தூக்கிச் சென்றுள்ளனர்.
முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு வரும் இந்த கும்பல்கள் கடையின் கண்காணிப்பு கேமராக்களையும் தூக்கிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இரவு பகலாக பரபரப்புடன் இயங்கி வந்த வணிக வளாகத்தை சமூக விரோத குமபல்கள் தங்கள் வசிப்பிடமாக மாற்றிக் கொண்டுள்ளதாக புகார் கூறுகின்றனர்.