spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்ஏட்டிக்குப் போட்டி... ஈ.ஓ., ஏ.சி., ‘ஆசி’யில் காஞ்சி வரதர் கோயிலில் நேற்றும் தொடர்ந்த மோதல்!

ஏட்டிக்குப் போட்டி… ஈ.ஓ., ஏ.சி., ‘ஆசி’யில் காஞ்சி வரதர் கோயிலில் நேற்றும் தொடர்ந்த மோதல்!

- Advertisement -

kanchi varathar temple satrumurai

சென்னை: புகழ்பெற்ற வைணவத் திருத்தலமான விஷ்ணு காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் நெடுங்காலமாகவே இரு பிரிவு வைணவர்களுக்கு இடையே மோதல் இருந்து வந்துள்ளது. அண்மைக் காலமாக அது அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் நம்மாழ்வார் சாற்றுமுறை என்ற நிகழ்ச்சியில் பாசுரம் சொல்வதில் ஏற்பட்ட தகராறு, நேற்றும் நீடித்தது. இந்த முறை சொல்லக் கூடாது என்று தடுக்கப் பட்ட தேசிக பிரபந்த பாசுரங்களை சாற்றுமுறை நிகழ்வில் சொன்னார்கள் என்று தகராறு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் ஸ்ரீவரதர் கோயில் பிற்காலத்தில் வடகலை பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இருப்பினும், தென்கலை பிரிவைச் சேர்ந்த வைணவர்கள், தங்கள் பாரம்பரிய வழிபாட்டு முறைகள் சிலவற்றை நீதிமன்றத்தின் ஆணை மூலம் பெற்று தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஆனால் அவற்றுக்கு அவ்வப்போது தடங்கல் செய்யப் பட்டு, மோதல் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.

காஞ்சி கோயிலைச் சேர்ந்த நம்மாழ்வார் சந்நிதி தென்கலை பிரிவினரின் பூஜையில் உள்ளது. தமிழ் வேதம் என்று போற்றப் படும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் மிக முக்கியமானதாகக் கருதப் படும் திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம் என வடமொழியில் திகழும் நான்கு வேதங்களின் சாரமாக அழகுத் தமிழில் பாசுரங்களாக அளித்தவர் நம்மாழ்வார். அவர் அவதார நாளான வைகாசியில் வரும் விசாக நட்சத்திர நாளை ஒட்டி சாற்றுமுறை நிகழ்வின் போது, நம்மாழ்வாரின் பாசுரங்களைச் சொல்லி வழிபாடு நடத்துவது மரபு.

நம்மாழ்வார் சந்நிதியில் வரதாராஜப் பெருமான் உத்ஸாவர் எழுந்தருளி நம்மாழ்வார் பாசுரங்களைக் கேட்டு, தீர்த்தம் சடாரி மரியாதைகள் அளித்து செல்வது வழக்கம். ஆனால், இந்த வருட உத்ஸவத்தின் போது, நேரமின்மையைக் காரணம் காட்டி, சாற்றுமுறையை முடிக்க விடாமல், முன்னதாகவே கோயிலார்கள் வரதராஜர் உத்ஸவரை அவசர அவசரமாக வெளியில் எழுந்தருளிக் கொண்டு போனார்கள். இதனால் ஏற்பட்ட தகராறு அடிதடியால் காஞ்சி பிரமோத்ஸவத்தின் போது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டு, விஷ்ணுகாஞ்சியே அல்லோலகல்லோலப் பட்டது.

இந்த நிலையில் நேற்று (செப்.21 வெள்ளிக் கிழமை) வடகலை பிரிவினரின் முக்கிய நிகழ்வான புரட்டாசித் திருவோணத்தை முன்னிட்டு வேதாந்த தேசிகன் சாற்றுமுறை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான இரு பிரிவு வைணவர்களும் கலந்து கொண்டனர். அப்போது இரவு சுமார் 11 மணி அளவில் வரதர் சந்நிதியில் தேசிகன் சற்றுமுறை முடியும் நேரத்தில், நீதிமன்ற உத்தரவையும் மீறி வடகலை குழுவினரால் தேசிக பிரபந்தம் தொடங்கப்பட்டு சொல்லப் பட்டது. அதற்கு தென்கலை பிரிவினர் கடும் ஆட்சேபம் எழுப்பினர். இந்த நேரத்தில் இங்கே இது சொல்லக் கூடாது என்று செயல் அலுவலரிடம் புகார் கூறினார். ஆனால், அவர் கண்டு கொள்ளவில்லை. இதனால், இந்த நிகழ்வுக்கு கோயில் செயல் அலுவலர் EO அனுமதி அளித்ததாகவே தென்கலை பிரிவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், இவ்வாறு தேசிக பிரபந்தம் சொல்வதற்கு நீதிமன்றத்தில் தடை பெற்றிருப்பதாக தென்கலை பிரிவினர் புகார் கூறினர். ஸ்ரீனிவாசாசாரியார், தாத தேசிகன் இருவருக்குமான வழக்கில் 24.03.1969ல் இது குறித்த தீர்ப்பு அளிக்கப் பட்டதாகவும், நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் வடகலை பிரிவினர் நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்தது இந்து சமய அறநிலையத்துறையின் தியாகராஜன் EO மற்றும் உதவி ஆணையர் அசோக் குமார்தான் என்கின்றனர். முந்தைய நம்மாழ்வார் சாற்றுமுறை நிகழ்வின் போதான அராஜகங்களை நாங்கள் பல முறை அறநிலையத்துறைக்கு புகார் மனுவாக அளித்தும், அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்கின்றனர்.

பாசுரங்கள் சொல்ல வேண்டும் என்று நியதி இருக்கும் போது, பாசுரங்கள் சொல்வதை வேண்டுமென்றே தென்கலையார் மெதுவாகச் சொல்கின்றனர் எனவே நேரமில்லை என்று காரணம் காட்டி பெருமாளை அங்கிருந்து வேகவேகமாக எடுத்துச் சென்றனர்; ஆனால் தேசிக பிரபந்தம் சொல்வது என்பது நடைமுறையில் இல்லாத, சொல்வதற்கு தடை விதிக்கப் பட்டிருக்கிற போது, வேண்டுமென்றே அதை சொல்லி அவமானப் படுத்துகின்றனர். இன்றுவரை அவ்வாறு நின்று போன நம்மாழ்வார் சாற்றுமுறை நடக்கவில்லை. ஆனால், இந்த நிகழ்வை கடைசி நிமிடம் வரை எவருக்கும் வெளிப்படுத்தாமல், ரகசியமாக திட்டமிட்டு இவ்வாறு சொன்னது அதிர்ச்சி அளிக்கிறது என்று தென்கலையார் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் வடகலை பிரிவினரோ, நாங்களும் தமிழ் பாசுரங்கள் சேவிப்போம். தேசிக பிரபந்தம் தமிழ்ப் பாசுரங்கள்தான். நம்மாழ்வார் சாற்றுமுறை நிகழ்வில் ஏதோ தமிழுக்கு நாங்கள் மதிப்பளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்களே! அது இல்லை என்பதை நிரூபித்துள்ளோம். மேலும் தேசிகனின் 750ஆம் ஆண்டு அவதார நிகழ்வு என்பதால், அவர் அளித்த தமிழ்ப் பாசுரங்களை சொல்வது என்று நாங்கள் முடிவு செய்தோம். அது அவருக்கான கௌரவம் என்று கூறுகின்றனர்.

ஆனால் தென்கலையாரோ, படிப்படியாக நம்மாழ்வாருக்கும் வடகலை திருமண் அணிவித்து, சந்நிதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ரகசியத் திட்டம் அவர்களுக்கு இருக்கிறது. மேலும் எங்கள் ஆசார்யரான மணவாளமாமுனிகளுக்கான முக்கியத்துவத்தை குறைத்து கோயிலில் இருந்து வெளியேற்றவும் சதி செய்வார்கள் என்று தங்கள் அச்சத்தை தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இரு தரப்பு ஆலய பூஜை நடைமுறைகளில் ஏற்படும் மோதல்களை தடுத்து, சுமுகமாக கொண்டு செல்லவேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகளோ சச்சரவுகளுக்கு மேலும் மேலும் தூபம் போடுபவர்களாக இருப்பது மட்டும் நன்கு வெளித் தெரிகிறது.

இந்த நிகழ்வின் காணொளிக் காட்சி (வீடியோ) :

1 COMMENT

  1. நீதிமன்றத்தில் சொல்லியபடித்தான் ஸ்ரீ வரதர் குறித்த ஆறு பிரபந்தங்கள் சேவிக்கப்பட்டதாக நம்பக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நீதி மன்ற வழக்கில் வாதாடிய மூவர் குழுவில் வடகலை இருவருடன் ஒரு தென்கலையாரும் இருந்தார் என்பதை தினசரி ஆசிரியருக்கு தெரிவிக்கிறேன் அவர் பெயர் கமலக்கண்ணன் . பிரட்டாசி திருவோணத்தன்று எந்த கூச்சல் குழப்பம் இல்லை எனப்தே உண்மை ஒருவேளை தேசிகர் ஸ்ரீ வரதர் குறித்து பாடிய பாசுரங்களை சர்ச்சை குழப்பம் ,கூச்சல் என்று தின சரி ஆசிரியர் கூறுகிராரோ ? வந்ததிகள் வேண்டாம் ப்ளீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe