லயோலா கல்லூரியில் கடந்த ஜன.19,20 ஆகிய இரு தினங்களுக்கு நடைபெற்ற கிராமியத் திருவிழா என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும், ஓவியக் கண்காட்சியிலும், நாட்டின் நலத் திட்டங்களுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும், ஹிந்து மதக் கடவுளர்களை அவமரியாதை செய்யும் வகையிலும் நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன.
இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு புகார்கள் டிஜிபி.,க்கும், மத்திய மாநில அரசுகளுக்கும் சென்ற வண்ணம் உள்ளன. இந்நிலையில், வர்த்தக ரீதியாக இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்த சென்னையைச் சேர்ந்த ‘கங்கா ஸ்வீட்ஸ்’ஐ ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தீபாவளி, நவராத்திரி, விஜயதசமி, பொங்கல் என பல்வேறு விழாக்களைக் கொண்டாடுபவர்கள் ஹிந்துக்கள்தான் என்றும், அந்த ஹிந்துக்களின் கடவுளர்களையும் உணர்வுகளையும் கொச்சைப் படுத்தி, அவதூறுப் பிரசாரம் செய்த ஒரு நிகழ்ச்சிக்கு ஸ்பான்ஸர் செய்து அழைப்பிதழில் தங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தை இடம்பெறச் செய்த கங்கா ஸ்வீட்ஸ்-ஐ ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் குரல்கள் எதிரொலிக்கின்றன.
இது போன்ற நிகழ்ச்சிகளுக்கும், நக்சல் இயக்கங்களுக்கும் ஸ்பான்சர் செய்யும், நிதி உதவிகளை வழங்கும் நிறுவனங்களின் பொருள்களை ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், அப்படிச் செய்தால்தான் இது போன்ற அவலங்கள் நாட்டில் மீண்டும் மீண்டும் நடைபெறாது என்றும் கூறுகின்றனர் சமூக வலைத்தளங்களில்!
இந்நிலையில், கங்கா ஸ்வீட்ஸ் நிறுவனத்திடம் இந்தத் தகவல் குறித்து தொடர்பு கொண்டோம். அந்நிறுவனத்தின் சார்பில் செல்வராஜ் என்பவர் நம்மிடையே பேசியபோது, நாங்கள் நலிவடைந்த கலைஞர்களுக்கு வருடாவருடம் விருது கொடுக்கும் நிகழ்வுக்கு மட்டுமே ஸ்பான்ஸர் செய்கிறோம். நடந்த நிகழ்வுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேலும் இப்படி சர்ச்சைக்குரிய படங்கள் ஓவியங்களாக வைக்கப்படுவதும் எங்களுக்கு தெரியாது. நாங்கள் பார்க்கவும் இல்லை. வருடம் தோறும் வழங்கப்படும் விருதுகளுக்கான ஸ்பான்சர் தானே என்று நல்ல நோக்கத்தின் அடிப்ப்டையிலேயே இந்த முறையும் கொடுத்தோம். எங்களுக்கும் இந்த நிகழ்வுகள் வருத்தம் தந்திருக்கின்றன…. என்றார்.