பக்தன் பாவம் பரிதவிக்கிறான்… ரவுடியோ ராஜ்ஜியம் செய்கிறான்… இதுதான் அத்திவரதர் தரிசனத்துக்கு அரசாங்கம் செய்யும் அல்லக்கை அட்டகாசங்கள் என்று குமுறுகின்றனர் பக்தர்கள்.
காஞ்சிபுரத்தில் மிகவும் புகழ்பெற்ற அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிவரும் பெருமாள் என்பதால் இத்தனை ஆர்வம் அன்பர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால், அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரள்கின்றனர். அவர்களில் பலர், அத்திவரதரை தரிசிக்க முடியாமல் பாதியிலேயே திரும்பி விடுகின்றனர்.
ஆனால், இத்தனை கெடுபிடிகளுக்கும் மத்தியில் மதுரை பகுதி ரவுடி வரிச்சியூர் செல்வம் விவிஐபி.,க்கள் தரிசனம் செய்யும் இடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகத் தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மதுரை ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது பல்வேறு நகரங்களில் உள்ள காவல் நிலையங்களில் கொலை முயற்சி, ஆட்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் அத்தி வரதரை விவிஐபி.,க்கள் தரிசனம் செய்யும் இடத்தில் அமர்ந்து தரிசிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தி வரதரை ஒவ்வொரு நாளும் சராசரியாக 1 லட்சம் பேர் தரிசனம் செய்து வருகின்றனர். கட்டுப் படுத்த இயலாத அளவுக்கு கூட்டம் மொய்க்கும் நிலையில், அரசுத் துறைகள் கூட்டத்தைக் கையாள இயலாமல் அவப் பெயர் பெற்று அல்லாடி வருகின்றன.
இருந்தாலும் அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களை சிறப்பு தரிசன வரிசையில் அனுப்பிவைக்கின்றனர் என்று புகார் கூறப் படுகிறது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, ரவுடி வரிச்சியூர் செல்வத்தை விவிஐபி., சலுகையில் அனுப்பி வைத்தது யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறதாம்!