அத்தி வரதரை தரிசிப்பதற்கு வயதானவர்களும் பெரியவர்களும் அதிகம் ஆர்வமுடன் உள்ளனர். பெரும்பாலும் 60 வயதைக் கடந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் மீண்டும் ஒருமுறை அத்திவரதரை தரிசிக்க வாய்ப்பு அமையாது என்ற மனநிலையில் இந்த முறையாவது அத்திவரதரை தரிசித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக அளவில் காஞ்சிபுரம் வருகின்றனர்.
வாழ்நாளில் ஒரு முறையே இந்த வாய்ப்பு அமையக் கூடும் என்ற உந்துதலில் 60 வயதைக் கடந்த பெரியவர்கள், வயது முதிர்ந்தோர் தரிசனத்துக்கு வந்து சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு தரிசனம் எளிதில் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழி செய்திருக்க வேண்டும். மாறாக வயதானவர்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள், உடல் நலம் குன்றியோர், கர்ப்பிணிகள் வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கூறுவது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் பொன்னையா இதுகுறித்து கடந்த ஓரிரு நாட்களாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து வந்தார். அவரது கருத்தை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் எதிரொலித்தார்.
இந்நிலையில் இன்று தினசரி பத்திரிகைகளில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சார்பில் ஓர் அறிக்கை விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில்,
அருள்மிகு அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விடுக்கும் அன்பான வேண்டுகோள்!
அருள்மிகு அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு அரசுத் துறைகளும் அனைத்து ஏற்பாடுகளையும் விரிவாக செய்துள்ளனர். பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் அருள்மிகு அத்திவரதரை தரிசனம் செய்ய குறைந்த பட்சம் 4 மணி முதல் 6 மணி நேரம் ஆகிறது. எனவே உடல் தளர்ந்த முதியவர்கள், உடல் நலம் குன்றியோர், கர்ப்பிணிகள் பச்சிளம் குழந்தை மற்றும் அவர்களை அழைத்து வருவோர் அருள்மிகு அத்திவரதரை தரிசிக்கும் நிகழ்வினை கூடுமானவரை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாவட்ட ஆட்சித்தலைவர் காஞ்சிபுரம் மாவட்டம் – என்று ஒரு அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இது பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வயதில் குறைந்தவர்கள் அல்லது இளைஞர்கள் மீண்டும் ஒருமுறை அத்திவரதரை தரிசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கும் ஆனால் வயதானவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்று நம்புவதால் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வயது முதிர்ந்தோர் எண்ணுவதில் தவறு ஒன்றும் காண இயலாது.
எனவே மாவட்ட நிர்வாகம், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளித்து தரிசனத்துக்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து தங்களால் இயலவில்லை என்பதற்காக ஆலயத்துக்கு அவர்கள் தரிசனத்துக்கு வரக்கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்!