திட்டமிட்டப்படி நாட்டின் முதல் நியூட்ரினோ ஆய்வு மையம் தேனியில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில்,கடும் எதிர்ப்பையும் மீறி தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்தால் மிகப்பெரிய போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும் என பொட்டிபுரம் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
மக்களின் இந்த ஆவேசத்திற்கு காரணம். 2015-ம் ஆண்டு தேனி மாவட்டம் பொட்டிபுரத்திலுள்ள, அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ரூ.1500 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் துவங்கின.
மலையயைக் குடைந்து நடத்தப்படும் இந்த ஆராய்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு நோய்களும் ஏற்படும் எனக் கூறி வழக்கு தொடரப்பட்டது.இதனால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இந்நிலையில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நியூட்ரினோ மையம் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தது சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மக்கள் ஆழ்துளை கிணறு அமைத்தாலே நிலத்தடி நீர் குறைகிறது. இச்சூழலில் 2 கிமீ தூத்திற்கு மலையை குடைந்து அணு ஆய்வு மையம் அமைத்து 50,000 டன் எடையுள்ள மின்காந்தத்தை வைத்து ஆய்வு செய்ய போகிறோம் என கூறுகிறார்கள். இதனால் எங்களுக்கு கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையை நம்பி 5 மாவட்ட மக்கள் உள்ளோம். மலையை குடைவதலால் அந்த அணைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மிகப்பெரிய அழிவை நாங்கள் சந்திப்போம் என்ற பயம் எங்களுக்கு உள்ளது என கூறியுள்ளனர். மேலும் நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை செயல்படுத்த நாள்தோறும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தபடும் என்பதால், கடும் குடிநீர் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் வாரியம், வனவிலங்குகள் நலவாரியம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிலிருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால் மத்திய சுற்றுச்சூழல் அனுமதியை மட்டுமே வைத்து கொண்டு, திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இயற்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் இந்த திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்க கூடாது என பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்