கலந்த மாவு கடக் பூரி
தேவையானவை:
கோதுமை மாவு – ஒன்றரை கப்
ரவை – கால் கப்
கடலை மாவு – அரை கப்
கம்பு மாவு – கால் கப்
நெய் – அரை கப்
கறுப்பு எள், வெள்ளைஎள் -தலா ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
விருப்பமான ஊறுகாய் -தேவையான அளவு
நெய், அரிசி மாவு -தலா ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு -தேவையான அளவு
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவுடன் கடலை மாவு, கம்பு மாவு, ரவை, சீரகம், உப்பு, சிறிதளவு கறுப்பு எள், வெள்ளை எள் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் உருக்கிய நெய் சேர்த்து பிரெட்தூள் பதத்துக்குப் பிசிறி சிறிது நேரம் மூடி வைக்கவும்.
பிறகு, மாவுடன் தேவையான அளவு தண்ணீர் தெளித்து, பூரி மாவுப் பதத்துக்குப் பிசைந்து ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு, மாவைச் சற்றுப் பெரிய உருண்டைகளாக்கி சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.
ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் குழைக்கவும். ஒரு சப்பாத்தியின் மேல் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு – நெய் கலவையைத் தடவவும். அதன்மீது மற்றொரு சப்பாத்தியை வைத்து ஓரங்களை ஒட்டவும். இதை பாய் போல சுருட்டி, தேவையான அளவு துண்டுகளாக்கி பூரிகளாகத் தேய்க்கவும். அதன்மீது சிறிதளவு கறுப்பு, வெள்ளை எள்ளைத் தூவி அழுத்தவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். மேலே ஊறுகாய் தடவி பரிமாறவும். எல்லா சப்பாத்திகளையும் இதேபோல் செய்துகொள்ளவும்.
குறிப்பு: இந்தப் பூரி. மூன்று நாள்கள் வரை நன்றாக இருக்கும்.