பருப்பு உருண்டைக் குழம்பு
தேவையானவை: கடலைப்பருப்பு – கால் கிலோ, தேங்காய் துருவல் – ஒரு கப், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 3 பல், மஞ்சள்தூள், கசகசா – தலா ஒரு டீஸ்பூன், தனியாத் தூள் – டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 4 (நறுக்கவும்), தக்காளி – 3 (நறுக்கவும்), புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, முந்திரி – 10, கடுகு, உளுத்தம்பருப்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, அதோடு சோம்பு, சீரகம், உப்பு, 4 காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண் ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள பருப்பு விழுதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். தேங்காய் துருவல், கசகசா, மீதமுள்ள மிளகாய், முந்திரி ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் விட்டு, கடுகு, உளுந்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை வறுக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பிறகு ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்கவிட்டு, மஞ்சள்தூள், தனியாத் தூள், உப்பு சேர்த்து… அரைத்து வைத்த விழுதை கொதிக்கும் கலவையில் சேர்த்து மேலும் இரண்டு கொதி வந்ததும் புதினா, கொத்தமல்லி சேர்த்து இறக்கிவிடவும். பொரித்து வைத்துள்ள உருண்டைகளை அதில் போடவும். 15 நிமிடம் ஊறியதும் பரிமாறவும்.
இந்த பருப்பு உருண்டைக் குழம்பு… சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும், சப்பாத்தி, தோசைக்கு சைட் டிஷ் ஆக சுவைக்கவும் ஏற்றது.