இனிப்பு வடகம் ஜவ்வரிசி வடகம் இடும் போது, உப்பு, காரம் சேர்ப்பதற்கு முன்பு தனியாகக் கொஞ்சம் ஜவ்வரிசிக் கூழ் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை நன்கு பொடித்து கூழில் கலந்து, சிறிது ஏலக்காய்ப் பொடியும் போட்டுக் கலக்கி, வழக்கம் போல் வடகம் இடவும். மாலை வேளையில் குழந்தைகளுக்கு இனிப்பு வடகம், கார வடகம் இரண்டையும் பொரித்துக் கொடுக்கலாம்.
தேவையான அளவு பச்சரிசியை சன்ன ரவையாக மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். 1க்கு 2½ பங்கு என்ற அளவில் தண்ணீர் எடுத்து உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
ரவையைப் போட்டு உப்புமா போல் கிளறி ஆறவைத்துக் கொள்ளவும். ஆறியதும் புளித்த மோர், அரைத்த பச்சை மிளகாய் விழுது, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து வெயிலில் பாலிதீன் பேப்பரைப் போட்டுக் கிள்ளி வைக்கவும். பக்கோடா போல் மொறுமொறுப்பாக இருக்கும். ஜவ்வரிசி தேவையில்லை.
வெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது. வற்றல் செய்யும்போது நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது உப்பைப் போடும் போதுதான். நாம் டேஸ்ட் செய்யும் போது உப்பு சரியாக இருப்பதாக இருந்தால் கூட அதைவிடத் துளி கம்மியாகத்தான் போட வேண்டும்.
நாள் ஆக, ஆக உப்பின் சுவை அதிகமாகத் தெரியவரும். ஜவ்வரிசி, கூட்டு, வடாம் இவற்றுக்கு உப்பைச் சிறிது குறைத்தே போட வேண்டும்.
வடாம் வைத்திருக்கும் டப்பாக்களில் சிறிது கெட்டிப் பெருங்காயத்தைப் போட்டு வைத்தால் வடாம் பெருங்காய மணத்துடன், புதிது போல் இருக்கும்.
நல்ல கெட்டியான சாமான் வாங்கும் கேரீ பேக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வற்றல் மாவை பை கொள்ளுமளவுக்கு சற்றுக் குறைவாக எடுத்துக் கொண்டு அடி பாகத்தைக் கத்தரிக்கோலில் முறுக்கு அளவுக்கு மாவு வரும் பாகத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.
இது சுலபமாக, சீக்கிரமாக வேலையை முடிக்கும். வற்றல் கம்பி கம்பியாக இழுக்க வரும். காய்ந்தவுடன் எடுப்பதற்கும் அதே போல வரும்
1- ஜவ்வரிசி வடாமோ, அரிசி வடாமோ செய்யும்போது, கிளறும் கூழில் கசகசாவை ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டால் தனியான சுவையும் மணமும் சேரும்.
2- காய்ந்துபோன கறிவேப்பிலையைப் பொடி செய்து ஜவ்வரிசிக் கூழிலோ, அரிசிக் கூழிலோ கலந்தால், பச்சை வண்ண வடாம் தயார். சுவையும் கூடும். சத்தும் கூடும்!
3- வெண்டைக்காய், கொத்தவரங்காய் போன்றவற்றை நறுக்கி உப்பு கலந்த மோரில் ஊறவைத்து வெயிலில் நன்கு காயவைத்தால் சுவையான, சத்து நிறைந்த வற்றல் கிடைக்கும்.
4- கேரட்டைப் பிழிந்து சாறு எடுத்து வடாம் செய்ய தயாரித்த கூழில் கலந்து விட்டால் சத்து மிகுந்த ஆரஞ்சு வண்ண வடகம் கிடைக்கும்.
5- எல்லா வடாம்களிலும் பெருங்காயத்தைச் சேர்ப்பது வாசனையைக் கூட்டுவதோடு உடல்நலனுக்கும் உகந்தது.
6- ஜவ்வரிசி வடாம் செய்யும்போது, மிளகு, சீரகப் பொடி கலந்தால் சுவையும், மணமும் கூடுவதோடு உடம்புக்கும் நல்லது.