சேனை மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு – ஒரு சிறிய துண்டு, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,
தயிர் – 100 மில்லி
அரிசி – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு அரிசியையும் மிளகையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். சேனையைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிட்டு, தண்ணீரை வடித்துக்கொள்ளவும். வறுத்த மிளகு, அரிசியை ஒன்றாகச் சேர்க்கவும். இதனுடன் மோர்க்குழம்புக்குத் தேவையான உப்பையும் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். இதைத் தயிருடன் சேர்த்துக் கலக்கவும். பின்னர் இந்தத் தயிர்க் கலவையில் வேகவைத்த சேனையைச் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து இந்தக் கலவையில் சேர்க்கவும். வித்தியாசமான ருசியில் மோர்க்குழம்பு ரெடி.