
பனிவரகு ஆப்பம்
மழையைக்கொண்டும் சிறு நீரினைக் கொண்டும் மானாவாரி விளையும் வரகு. சாமை, தினை, குதிரைவாலி என்று வரிசையில் பனியைக் கொண்டு மலைகளில் குறிப்பாக குளிர்பிரதேசங்களிலும் விளையக்கூடியது
இந்த பனிவரகு.
மணி மணியாக இருக்கும் சிறுதானிய அரிசிகளின் வரகரிசியைப் போல் சற்று பெரிதாகவும், தினையைப் போல் இளம் மஞ்சள் நிறத்திலும் காணப்படுகிறது இந்த
பனிவரகு. சத்து நிறைந்த இந்த பனிவரகு ஆறுமாதமான குழந்தைகள் முதல் முதியோர்க வரை யாவரும் உண்ண தகுந்தது. இதனில் இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் மிகுந்திருக்கின்றன.
இன்றைய தலைமுறைகளுக்கு இருக்கும் இரத்த சோகைத் தொந்தரவிற்கு சிறந்த உணவு இந்த பனிவரகு. கோதுமையை விட ஐந்து மடங்கு அதிக இரும்பு சத்தும், இரண்டு மடங்கு அதிக நார்ச்சத்தும் கொண்டிருக்கிறது இந்த பனிவரகு.
12.5 சதவீதம் புரதத்தை கொண்டிருக்கிறது. இந்த பனிவரகை வாரம் 2 முறை உண்ண நல்ல பலன் கிடைக்கும். சாதமாகவும், இட்லி தோசை, உப்புமா, முறுக்கு என அனைத்து வகை அன்றாட உணவுகளையும் இந்த பனிவராகில் செய்து உண்ணலாம்.
தேவையான பொருட்கள்
• 2 கப் பனிவரகு அரிசி
• 3 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
• 1 ஸ்பூன் வெந்தயம்
தேவையான அளவு உப்பு
• 1/4 கப் தேங்காய்ப்பால்
ஏலக்காய் தூள்
நாட்டு சர்க்கரை
செய்முறை
- பனிவரகு அரிசி, பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின் இவற்றை மைய அரைத்தெடுக்கவும்.
- அத்துடன் உப்பு சேர்த்து கரைத்து இரவு முழுவதும் அல்லது 8 மணி நேரம் புளிக்க விடவும். மறுநாள், பனிவரகு மாவை நன்றாகக் கலக்கவும்.
ஆப்பசட்டியை (இல்லையென்றால் அடி கனமான ஒரு வாணலியை) அடுப்பிலேற்றி சூடாக்கவும்.
தோசைத்துணியில் சிறிது
எண்ணையைத் தொட்டு
ஆப்பச்சட்டியை துடைத்து விடவும்.
பின்னர் ஒரு பெரிய கரண்டி பனிவரகு – மாவை எடுத்து சட்டியின் நடுவே ஊற்றி சட்டியை இரு கைகளாலும் தூக்கி ஒரு சுற்று சுற்றி, (மாவு சட்டியைச் சுற்றி பரவி விடும்) அடுப்பில் வைத்து மூடி விடவும்.
ஓரிரு நிமிடங்களில் ஆப்பம் வெந்து
விடும். மூடியைத் திறந்து ஆப்பம் நடுவில் வெந்திருக்கிறதா என்று பார்த்து எடுத்து வைக்கவும்.
ஒரு கரண்டிகாம்பால் இலேசாக நெம்பி விட்டாலே போதும் கையாலேயே எடுத்து விடலாம்.
ஒரு பக்கம் வெந்தால் போதும். திருப்பிப் போட தேவையில்லை. பனிவரகு ஆப்பம் தயார்.
இதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து உண்ணலாம். தேங்காய்ப்பாலில் சிறிது ஏலக்காய் தூள், நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.