வாழைக்காய்ப் பொடிமாஸ்: சாதாரணமாக உ.கியில் தான் பொடிமாஸ் பார்த்திருப்பீங்க. ஆனால் தென் மாவட்டங்களில் விசேஷ நாட்களில் முக்கியமாய்ச் சமைப்பது வாழைக்காய்ப் பொடிமாஸ். கல்யாணங்களில் முஹூர்த்தம் முடிஞ்சதும் போடும் கல்யாணச் சாப்பாடில் வாழைக்காய்ப் பொடிமாஸும், கத்திரிக்காய்ப் பிட்லை, மோர்க்குழம்பு இல்லாமல் இருக்காது. அவ்வளவு முக்கியத்துவம் பெற்றது.
தேவையான பொருட்கள்: நான்கு பேர்களுக்கு
நல்ல விளைந்த வாழைக்காய் (நாட்டுக்காய்) பெரிதாக இருந்தால் இரண்டு, நடுத்தரமாக இருந்தால் மூன்று தேங்காய் ஒரு சின்ன மூடியைத் துருவிக்கொள்ளவும்.
எலுமிச்சம்பழம் அரை மூடி
பச்சை மிளகாய் 2 அல்லது 3
இஞ்சி ஒரு சின்னத் துண்டு
கருகப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கி ஒரு டேபிள் ஸ்பூன்
தாளிக்கத் தேங்காய் எண்ணெய் இரண்டு டீஸ்பூன்
பெருங்காயப் பொடி அரை டீஸ் பூன்
தேவையான உப்பு(பொடியாக)
கடுகு, உ.பருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன். சிலர் கடலைப்பருப்பும் சேர்க்கின்றனர். இது அவரவர் விருப்பம்.
வாழைக்காயை வேக வைக்கக் கூடாது. மாறாகக் கொதிக்கும் வெந்நீரில் போட்டுத் தோல் நிறம் மாறும் வரை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இரு பக்கமும் வாழைக்காய்த் தோல் நிறம் மாறியதும் கீழே இறக்கி அந்தச் சூட்டோடு பத்து நிமிடங்கள் வைத்திருக்கவும். ஆறியதும் தோலை உரிக்க வரும். தோலை உரித்துக் காரட் துருவியில் நன்றாகச் சீவிக் கொள்ளவும். கடைசிவரை சீவிக்கலாம். கையை வெட்டிடுமோனு பயமெல்லாம் வேண்டாம்.
பின்னர் அடுப்பில் வாணலியை வைத்துத் தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு தாளித்துக் கொண்டு பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை சேர்த்துக் கொஞ்சம் வதக்கிவிட்டு பெருங்காயப் பொடி சேர்த்து அடுப்பை அணைக்கவும். இப்போது துருவிய வாழைக்காய்த் துருவல், உப்பு, தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு கிளறவும்.
வாணலியில் இருக்கும் சூட்டிலேயே கிளறினால் போதும். அடுப்புச் சூட்டில் கிளறினால் நிறம் மாறி விடும். தேவையானால் ஒரே ஒரு நிமிஷம் வைத்து உடனே அடுப்பை அணைக்கவும். சூடு ஆறியதும் எலுமிச்சம்பழம் பிழிந்து கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.