உறவினர் மற்றும் நண்பருடன் கோயிலுக்குச் சென்ற இளம் பெண், கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியை சேர்ந்த இளம் பெண் தனது உறவினர் மற்றும் நண்பருடன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் இருந்த 3 பேர், அவர்களை வழிமறித்தனர்.
இளம் பெண்ணின் உறவினர் மற்றும் நண்பரை கடுமையாகத் தாக்கினர். இதனால் அவர்கள் தப்பி ஓடினர். பின்னர், அந்த இளம் பெண்ணை அடித்து வலுக்கட்டயமாகத் தூக்கிச் சென்றனர். மறைவான இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர்.
இவர்களிடமிருந்து தப்பியோடிய அந்தப் பெண்ணின் உறவினர், அங்கிருந்த சந்தைக்குச் சென்றார். கடைக்காரர்களிடம் நடந்தவற்றைக் கூறி, உதவி கேட்டுள்ளார். யாரும் உதவ முன் வரவில்லை. ஒரு கடைகாரர் மட்டுமே உதவ முன்வந்துள்ளார்.
அந்த இளம் பெண்ணை அவர்கள் இழுத்து சென்ற இடத்தை அனுமானித்து அங்கு சென்றார். அவரைக் கண்டதும் அந்த இளைஞர்கள் தப்பியோடினர். அந்தப் பெண், கடைக்காரரும் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி விடுவாரோ என்ற அச்சத்தில் தனது ஆடைகளை கூட எடுக்காமல் அரை நிர்வாணமாகவே அரை கி.மீ தூரம் வரை தப்பி ஓடியுள்ளார்.
அவரைப் பின் தொடர்ந்து சென்ற கடைக்காரர், ‘பயப்பட வேண்டாம்,காப்பாற்றத்தான் வந்தேன்’ என்று கூறியதை அடுத்து, அந்தப் பெண் நின்றார். ஆடைகளை கொடுத்து அணிந்து கொள்ள சொன்னார் அவர், பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
காவல்துறை வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு உடைந்த வளையல்கள், மது பாட்டில்கள், சிந்திக் கிடந்த ரத்தக்கறைகளைக் கண்டு அதை சேகரித்து வைத்துள்ளதாகவும் அந்தப் பகுதி டிஎஸ்பி, பரத்சிங் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது