தூத்துக்குடியில் பட்டப்பகலில் கல்லூரி மாணவரை அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சந்தையடியூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் அபிமன்யூ, செய்துங்கநல்லூரில் உள்ள சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற அபிமன்யூ, மதிய உணவு இடைவேளையின்போது, சாப்பிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல், கல்லூரி அருகிலேயே அபிமன்யூவை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்ததால் சுருண்டு விழுந்த அபிமன்யூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் சென்றது.
தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.