ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே உள்ளது குப்பம் ரெட்லபள்ளி என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பெண் சந்தனா. 17 வயது பெண்! குப்பத்தில் உள்ள அரசு காலேஜில் படித்து வந்தார்.
அதே கிராமத்தை சேர்ந்த 19 வயது நந்தகுமாரும் அதே காலேஜ்தான். இவர்கள் இடையே காதல்.
இருவருமே வேறு வேறு சமூகம். காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்தது.. சிறுமியை வீட்டில் கண்டித்தனர். பெற்றோர் சந்தனாவை அனுப்பவே இல்லை.
ஒருநாள் காதலர்கள் இருவருமே வீட்டை விட்டு வெளியே ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த விஷயம் சிறுமியின் வீட்டுக்கு தெரிந்துவிட்டது. இதனால் கடந்த சனிக்கிழமை சிறுமி தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து அங்கு சென்றுவிட்டனர்.
இரு வீட்டு பெற்றோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டனர். ஊரே திரண்டு வந்து வேடிக்கை பார்த்தது.
ஊர் பெரியவர்களோ.. முதலில் பெண்ணுக்கு திருமண வயது..இல்லை அதுக்கு பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி, காதலர்கள் இருவரையும் அவரவரர் பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வீட்டுக்கு வந்த சந்தனா, திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தரப்பில் சொல்லப்பட்டது. அவசர அவரசரமாக தங்களது விவசாய நிலத்தில் சந்தனா உடலை கொண்டு போனார்கள்.. அங்கேயே உடலை எரித்து, இறுதிச்சடங்கும் செய்தனர்.
தீயில் மொத்தமாக சந்தனாவின் உடல் எரிந்து முடிந்தது. கடைசியில் அவளது சாம்பலை அள்ளினார்கள். கொஞ்சம் நஞ்சம் கிடந்த எலும்பு துண்டுகளையும் தேடி எடுத்து ஒரு பைக்குள் போட்டுக் கொண்டு, அங்குள்ள ஒரு ஆற்றிலும் கரைத்து விட்டனர். இப்படிஒரு சம்பவம் நடந்தது எதுவுமே பக்கத்து வீட்டுக்காரர்களுக்குகூட தெரியாது.
விடிந்ததும் சந்தனா இறந்ததை கேட்டு ஊரே அதிர்ந்தது. மகளை பெற்றவர்களே கொன்றிருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டது.. காவல்துறையினரும் வந்து விட்டனர். தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட இடம், எரித்த இடம், கரைத்த இடம்.. ஒன்றுவிடாமல் இடங்களை பார்வையிட்டனர்.
வழக்கு பதிவு செய்து இது ஆணவ கொலையா என்ற கோணத்தில் விசாரணையை கையில் எடுத்துள்ளனர். பெத்த மகளையே கொன்றவர்கள் தன்னையும் கட்டாயம் கொலை செய்வார்கள் என்று பயந்து இப்போது நந்தகுமார, அவரது தந்தையும் தலைமறைவாக உள்ளனர். அதனால் அவர்களையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சித்தூரில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது