தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளது ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமம். இங்கு வசித்து வந்தவர் இளையராஜா. வயது 40 ஆகிறது. இவருடைய மனைவி சங்கீதா. இவருக்கு வயது 35 ஆகிறது.
கல்யாணம் ஆகி 18 வருடங்கள் ஆகின்றன லவ் மேரேஜ். 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இளையராஜா சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். சங்கீதா அம்மா வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இளையராஜாவுக்கும், சங்கீதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்தபடியே இருந்துள்ளது. ஆளுக்கு ஒரு ஊரில் உட்கார்ந்து கொண்டு சந்தேக புத்தியால். நிம்மதியை இழந்து, எந்நேரமும் சண்டை போட்டு கொண்டு இருந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்த இளையராஜா, சங்கீதாவுக்கு போன் செய்துள்ளார். அந்த நேரம் பார்த்து சங்கீதா போன் பிஸி. ரொம்ப நேரம் இளையராஜா போன் செய்தும், லைன் கிடைக்கவே இல்லை என தெரிகிறது.
இதனால் டென்ஷன் ஆகிவிட்டார் இளையராஜா. திரும்பவும் மனைவியை செல்போனில் கூப்பிட்டு, அப்போதே சண்டை போட ஆரம்பித்துள்ளார். போனிலேயே 2 பேரும் சண்டை போட்டு கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இளையராஜா சென்னையில் இருந்து கிளம்பி ஊருக்கே வந்துவிட்டார். சம்பவத்தன்று நேராக மாமியார் வீட்டுக்கு போனார். திரும்பவும் போன் சமாச்சாரத்தை பேசி தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியது!
இதில் ஆத்திரமடைந்த இளையராஜா, மாமியார் வீட்டில் வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து சங்கீதாவை குத்தியுள்ளதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார் சங்கீதா. உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பாப்பாநாடு காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ஆனால் இளையராஜாவை காணோம்.. அவரை வலைவீசி தேடி வருகின்றனர்!!