ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயராகவன். 30 வயது நிரம்பிய இவர் கோவை மாவட்டம் கருமத்தாம்பட்டியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் உதவி பொறியாளராக வேலை செய்து வந்தார்.
இவருக்கும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதா என்ற பெண்ணிற்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு தற்போது 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்தது முதலே நிவேதா பெற்றோர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் விஜயராகவன் அடிக்கடி வந்து மனைவி மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் மனைவி, குழந்தையை பார்க்க மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அன்று இரவு மாமனார் வீட்டிலேயே தங்கிவிட்டு, நேற்று காலை 6 மணியளவில் மீண்டும் இருச்சக்கரவாகனத்தில் கோவைக்கு புறப்பட்டுள்ளார்.
அப்போது கோவை தேசிய நெடுஞ்சாலையில் இவர் சென்று கொண்டிருந்தபோது, ஒரு லாரி முன்னால் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அதன் மீது மோதாமல் இருக்க இவர் மோட்டார் சைக்கிளை வலதுபுறம் திருப்பி உள்ளார். அப்போது எதிரே வந்த ஒரு வாகனம் இவரது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
அங்கு நடந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட விஜயராகவன் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விஜயராகவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்