மாமல்லபுரம் அருகே ஒரு பெண், தனது 5 வயது மகளுடன் கடந்த 4 ஆம் தேதி திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அதன் பிறகு வெகு நேரமாகியும் தாயும் மகளும் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் மகளை தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பள்ளி வாகனத்தின் டிரைவரான சரவணன் என்பவர் தான் இருவரையும் கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறைனர் சரவணின் மொபைல் ஃபோன் சிக்னலை வைத்து, அவர் கன்னியாகுமரியில் பதுங்கியுள்ளதை கண்டுபிடித்தனர். உடனடியாக தனிப்படை போலீஸார், கன்னியாகுமரிக்கு விரைந்துச் சென்று, அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த சரவணனைக் கைது செய்தனர், பின்பு அந்த லாட்ஜிலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்த தாயையும் மகளையும் மீட்டனர்.
அப்பெண்ணை விசாரித்ததில், வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்த பொழுது,தாயையும் மகளையும், கண்ட சரவணன் வீட்டில் விடுவதாக கூறி ஏமாற்றி கடத்திச் சென்றுயிருக்கிறார். பின்பு மகளை கொன்று விடுவதாக மிரட்டி தாயை பாலியல் தொந்தரவு செய்ததாக தெரியவந்தது. இதனையடுத்து பாலியல் துன்புறுத்தல், ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் சரவணன் மீது, போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்