அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் மீது, அமெரிக்க பதிவு பெற்ற சமூக வலைத்தள நிறுவனமான டிவிட்டர் எடுத்த நடவடிக்கைகள் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்ப் தோற்பதற்கான கருத்துகளை உள்நோக்கத்துடன் எடுத்துச் சென்ற டிவிட்டர் குறித்த எச்சரிக்கை உணர்வுகள் இப்போது இந்தியாவிலும் பட்டவர்த்தனமாகத் தெரிவதால், அதன் மீதான நடவடிக்கைகள் இப்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்தியாவிலும், அடுத்த வருடம் சில மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்தியத் தேர்தல்களில் கருத்துரிமை, பேச்சுரிமை என்ற போர்வையில், அரசியல் ரீதியான தலையீடுகள், உள்ளீடுகள், ஆட்சியைத் தீர்மானிக்கும் நடவடிக்கைகள் இவற்றில் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகத் தள நிறுவனங்கள் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்ற குரல்கள் இப்போது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
சமூகங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்துவது, பொய்யான, அல்லது சித்திரிக்கப்பட்ட தகவல்களை சுமந்து வருவது, பரப்புவது இவற்றை பேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றின் வழியே தேசவிரோதிகள் செய்து வருகின்றனர். இதற்கு இந்த நிறுவனங்கள் எதிர்நடவடிக்கைகள் எடுக்காமல், உடன் உதவுவதால், இவற்றின் மீதான நடுநிலைத்தன்மை சந்தேகத்துக்கு உரியதாகவே பார்க்கப் படுகிறது.
இந்தியாவில் தேர்தலில் கட்சிகளுக்கு ஆலோசனை, வியூகம் வகுத்துக் கொடுத்தல் என்பன போன்ற இனிப்பு தடவிய மிட்டாய்கள் போர்வையில் வலம் வந்து கொண்டிருக்கும் நிறுவனங்களின் பணியாளர்கள், அல்லது அவர்களே கூட இத்தகைய சமூகத் தள நிறுவனங்களுடன் வணிக ரீதியாக கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வது கண்கூடு.
இலவசமாக மக்களுக்கு பொழுது போக்கு அம்சங்களைக் கொடுப்பதாகக் கூறி, மக்களிடையே கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் வணிக நிறுவனங்களாக மாறிப்போன பேஸ்புக், டிவிட்டருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை குரல்கள் எழுந்துதான் வந்துள்ளன. ஆனால், கருத்துரிமை என்ற ஒற்றைக் காரணம் காட்டி, பல்லாயிரக்கணக்கான கோடிகள் புழங்கும் இந்த சமூகத் தளங்களை எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் அரசு செயல்பட விட்டிருப்பது நாட்டுப் பற்றாளர்களிடையே கோபத்தையே வரவழைத்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு சில விதிமுறைகளை சமூகத் தளங்கள், இணையதளங்கள், யுடியூப் உள்ளிட்ட தளங்கள், ஓடிடி தளங்களுக்கு விதித்தது. சமூகவலைதளங்களுக்கான புதிய விதிமுறைகளின் படி – குறை தீர்க்கும் அதிகாரி, நிர்வாகத்தின் தொடர்பு நபர், இணக்க அதிகாரி – ஆகியோரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் டிவிட்டர் இவ்வாறாக நியமிக்கத் தவறியதால், ட்விட்டர் தன் “இடைநிலை” (intermediary) என்ற அந்தஸ்தை இழந்தது!
இதன் காரணமாக, இனி ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் பதியும் தவறான – சட்டவிரோதமான தகவல்களுக்கு ட்விட்டரும் பொறுப்பேற்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கருத்துப் பகிர்வு என்பதை விட, கருத்து பதிப்பு என்பதாகக் கருதப் பட்டு, தேசவிரோதக் கருத்துகளுக்கு இனி காவல்துறை விசாரணை, கைது, சிறை இவற்றை டிவிட்டர் நிறுவன ஊழியர்கள் உட்படுத்தப் படலாம்.
அடுத்து, ட்விட்டர் மீதும் டிவிட்டர் பயன்பாட்டாளர்களான ரானா அயூப் கான், முகமது ஜுபேர், சபா நாக்வி, சல்மான் நிஜாமி உள்ளிட்ட பலர் மீதும் உத்தரபிரதேச காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
அதற்கான காரணம், ஜிஹாதிகளால் நடத்தப்படுவதாகக் கூறப்படும் ஆல்ட்நியூஸ் (altnews) எனும் ‘உண்மை அறியும்’ (fact-check) அமைப்பைச் சேர்ந்த முகமது ஜுபேர் என்பவர், “உத்தரப் பிரதேசத்தில் வயது முதிர்ந்த முஸ்லிம் ஒருவரை, சிலர் ‘ஜெய்ஶ்ரீராம்’ சொல்லச் சொல்லி வற்புறுத்தினர், அவரை அடித்தனர். அவர் தாடியை வெட்டினர்” என்று ஒரு வீடியோ பகிர்ந்தார்.
அதனை விசாரித்த உபி., காவல்துறை, “அந்த முஸ்லிம் முதியவர் தாயத்து விற்பவர். அவரிடம் தாயத்து வாங்கியவர்கள், அந்த தாயத்தால் நல்லது நடக்காவிட்டாலும், தங்களுக்கு கெட்டது நடந்தது என்று சொல்லி அவரை அடித்திருக்கிறார்கள். அடித்த நால்வரில் மூவர் முஸ்லிம்கள். அவர்களில் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவரை அவர்கள் ஜெய்ஶ்ரீராம் சொல்லச் சொல்லவில்லை. இது மத நோக்கில் நடந்த தாக்குதல் அல்ல என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
மதக் கலவரத்தைத் தூண்டும் நோக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்த முகமது ஜுபேர் அந்த வீடியோவில் குரலை மட்டும் மியூட் செய்து, அதையே பகிர்ந்திருக்கிறார். ஒலியில்லா வீடியோவைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் அதனை ரீட்வீட் செய்தனர். பல ஊடகங்களும் அதை காப்பி செய்து உண்மை என்ன என்று தெரிந்து கொள்வதில் துளியும் ஆர்வம் காட்டாமல், உள்நோக்கத்துடன் அப்படியே பகிர்ந்தனர்.
இதில், இந்து முஸ்லிம் கலவரம் உருவாகும் அபாயகரமான விளைவு இருந்ததால், உ.பி போலீஸார் அந்த வீடியோவை ‘manipulated media’ என்று அறிவிக்கக் கோரி ட்விட்டரை அறிவுறுத்தினர். ஆனால், போலீசாரின் கோரிக்கையை ட்விட்டர் துளியும் கண்டுகொள்ளவில்லை.
இதனிடையே, அந்த முதியவரை பேச வைத்து வீடியோ எடுத்தது, உள்ளூர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் என்பதும் தெரியவந்தது.
அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், பாஜக / கூட்டணி ஆளும் உ.பி, உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறும்போது, இது போல், மதக் கலவரத்தைத் தூண்டி, அரசியல் ரீதியாக குளிர்காயும் செயல்கள் அதிகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதற்கு, பேஸ்புக், டிவிட்டர் ஆகிய சமூகத் தளங்களே முக்கிய ஊடகங்களாகவும் அமையும்.
இவ்வாறு மதக்கலவரத்தைத் தூண்டும் பணியில் ட்விட்டர் முக்கியப் பங்கு வகிக்க, மற்ற பிரதான ஊடகங்கள் டிவிட்டரில் வரும் கருத்துகளை மேற்கோள் காட்டி, மதக்கலவரங்களில் கணிசமான பங்கை ஆற்றும். ஆனால், நடக்கும் உண்மையான நிகழ்வுகளை, உள்நோக்கங்களை நிச்சயம் வெளியிடாமல், அவற்றை ப்ளாக் செய்யும்.
எனவே தான், டிவிட்டர் நிறுவனம் தன் இண்டர்மீடியரி – இடைநிலையாளர் அந்தஸ்தை இழந்ததால், இனி இத்தகைய புகார்களுக்கு அதன் பணியாளர்கள் கைது செய்யப்படுவர்!
BREAKING: UP Police have registered an FIR against 9 including #Twitter and some other chronic India haters like Rana Ayyub, Saba Naqvi, Muhammed Zubair, Salman Nizami, The Wire etc for propagating a false claim that an old man was thrashed, forced to chant Jai Sri Ram etc.