― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeதலையங்கம்திமுக., எம்.பி., முதல் எடுபிடி வரை போட்ட ‘இந்தி’ நாடகம்! மோடியால் ஆடிப்போன ‘தமிழ்’ ஊடகம்!

திமுக., எம்.பி., முதல் எடுபிடி வரை போட்ட ‘இந்தி’ நாடகம்! மோடியால் ஆடிப்போன ‘தமிழ்’ ஊடகம்!

- Advertisement -
stalin senthil balaji annamalai

கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது, பாஜக தமிழக தலைவர் கே அண்ணாமலை அளித்த பேட்டி. தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரங்களை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திய அண்ணாமலையின் பேட்டியினை, தமிழகத்தில் சமூக வலைத்தளங்கள் பொதுமக்களிடம் பெருமளவில் கொண்டு சேர்த்தன. குறிப்பாக ஆளும் கட்சியின் காட்சி ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியும் அதற்கு அண்ணாமலை அளித்த பதில்களும் இப்போது மீம்ஸ் க்ரியேட்டர்களின் கற்பனைக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றன.

அண்ணாமலை அளித்த பேட்டியின் பின்விளைவுகளையும் மக்களிடம் சென்று சேர்ந்தால் கிடைத்துவிடும் பேராதரவையும் யோசித்து, திமுகவின் கைக்கூலிகள் போட்ட மொழி நாடகம் இப்போது சந்தி சிரிக்கிறது. காரணம் திமுகவின் டூல்கிட் இப்போது அதே சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருவதுதான்..!

தமிழக மின்வாரியத்தில் மிகப் பெரும் ஊழல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் நடக்கின்றன என்று மோப்பம் பிடிப்பதுபோல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அண்ணாமலை. அது மக்கள் மனதில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பரவலாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. திமுக ஆட்சி என்றாலே அறிவிக்கப்படாத மின்வெட்டு தான் என்ற மக்களின் அச்சத்தை அது வலுப்படுத்தியது. அதேநேரம் மின் கருவிகள் பழையவை பழுதானவை… அவற்றை மாற்ற வேண்டும்; பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று புதிய கருவிகளை கொள்முதல் செய்வதற்கான திட்டத்துக்கு அடிபோட்டார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

மேலும் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கான காரணமாக அணில்கள் ஓடி விளையாடுவதால் கம்பிகள் ஒன்றோடொன்று உரசி பிரச்சனை ஏற்படுகிறது என்றார். இதுவும் சமூக மட்டத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இத்தனை நாட்கள் இல்லாத அணில்கள் இப்போது எங்கிருந்து வந்தன என்ற கேள்வியும் முளைத்தது…

தொடர்ந்து கொரானா காலத்தில் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு செய்ய பிரச்சினை எழுந்தபோது, அவரவர் தமது மின் அளவீட்டை தாங்களாகவே பார்த்து வாட்ஸ்அப் வாயிலாக மின் வாரியத்திற்கு அனுப்பலாம்; அல்லது கடந்த இரு வருடம் முன் இதே காலகட்டத்தில் என்ன மின் அளவீடு பயன்படுத்தப் பட்டதோ அதையே எடுத்துக்கொண்டு மின்கட்டணம் கணக்கிடப்படும் என்ற பதிலை அளித்தார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

ஆனால் அதற்கடுத்த இருமாத மின் கட்டணம் பொதுமக்களின் சேமிப்பை வெகுவாக பதம் பார்த்தது. ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் வாய்ப்புகள் இன்றி வருமானம் குறைந்து நொந்து போயிருந்த மக்களுக்கு மின்கட்டண விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுவரை இல்லாத உச்சபட்ச கட்டணத்தை கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு பயனர்கள் தள்ளப்பட்டனர்..

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் மாதாமாதம் கணக்கிடப்படும் அதன் மூலம் மின் கட்டணங்கள் குறையும் என்ற உத்தரவாதத்தை அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்களாகியும் அதுகுறித்த எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை. இப்படி, பல்வேறு ஏமாற்றங்களுக்கு ஆளாகி இருக்கும் பொது மக்களுக்கு பேரிடி போல் அமைந்தது, மின்வாரியத் துறையில் ஊழல்கள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் நடப்பதாக வெளியான செய்தி.

எனவேதான் அண்ணாமலை வெளிப்படுத்திய தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் பரபரப்புடன் விவாதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இன்னல்கள் நேரும்போது ஓடிவந்து கைகொடுக்க வேண்டிய ஊடகங்கள், இந்த விவகாரத்தில் திமுகவின் திசைதிருப்பும் அரசியலுக்கு ஒத்து ஊதின. எனவே தான் சமூக வலைத்தளங்களில் தமிழக ஊடகங்களை பலரும் காறித்துப்பினர். அதன் தொடர்ச்சியாக, கோபாலபுரத்து ஊடகங்கள் என்ற அடைமொழி இப்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.

ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்படும்போது, ஜாதி அரசியலையும் மொழி அரசியலையும் ஈவேரா சிலைக்கு அவமரியாதை என்ற அரசியலையும் முன்னெடுக்கும் திமுக இப்போது அவசர அவசரமாக மொழி அரசியலை முன்னெடுத்தது. இதற்கு களப்பலி ஆனது உணவு விநியோகம் செய்யும் ஜூமாட்டோ நிறுவனம்!

பிரச்னையை திசைதிருப்ப… திமுக.,வின் கைக்கூலிகளான ஊடகங்கள், ஒரு இந்தி நாடகத்தை அரங்கேற்றின! அண்ணாமலை எழுப்பிய கேள்விகளை மக்கள் கவனத்திற்கு செல்லவிடாமல் திசை திருப்பிய தமிழக ஊடகங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டர் பதிவில் தமிழை முன்னிலைப் படுத்தினார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இதுவரை இவ்வாறு பதிவுகள் செய்தது இல்லை என்பதும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவை குறிப்பிட்டு அதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை அளித்த பேட்டி மாலை நேரத்தில் சமூக தளங்களில் வைரல் ஆன நிலையில், அன்று இரவே அதை திசை திருப்ப வழக்கம்போல் ஹிந்தி தமிழ் மொழி அரசியல் என, டுவிட்டர் பதிவில் தலைதூக்கியது. இது வேண்டுமென்றே ஒரு குழுவால் திட்டமிட்டு செய்யப்பட்டது என்றும், இது திமுகவின் டூல்கிட் என்றும், இப்போது ட்விட்டர் பதிவுகளில் வசைபாடி வருகின்றனர்!

அண்ணாமலை கூறிய ஊழல் குற்றசாட்டை திசை திருப்ப ஜூமாட்டோ நிறுவனம் தமிழ் மொழியை அவமானப் படுத்தியதாக ஒரு செய்தியை, ஊடகங்கள் எல்லாம் சொல்லி வைத்தாற்போல் ஒன்று போல திடீரென ஏன் கையிலெடுத்து பெரிது படுத்தின என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது

விகாஸ் என்ற ட்விட்டர் ஐடியில் இந்த Zomato ட்வீட்டுகளை தவிர்த்து வேறு எதுவுமே இல்லையே? முழுக்க திமுக ஆதரவு தரப்புகளை மட்டுமே டேக் செய்துள்ளார்.. ஒரு சாதாரண மனிதர் Twiter ல் tag செய்த அடுத்த நிமிடம் MP களில் இருந்து, ஊடகங்கள் வரை கோரஸாக பாடுகிறார்கள்.
…டூல்கிட் ????????

ஜூமாட்டோ நிறுவனம் குறித்து குற்றசாட்டு சுமத்திய விகாஸ் என்ற நபர் இதுவரை 6 ட்விட் மட்டுமே தனது ட்விட்டர் பதிவில் போட்டுள்ளார். அவை அனைத்துமே ஜூமாட்டோ குறித்த குற்றசாட்டுகள் மட்டுமே! இந்த டிவிட்டர் பதிவுகளில், அவர் திமுக.,வினர் மற்றும் அவர்களது ஆதரவு ஊடகத்தினரை மட்டுமே டேக் செய்துள்ளார்.

இந்த சம்பவம் திட்டமிட்டு ஓர் இரவில் உருவாக்கப்பட்ட சம்பவமாகவே பார்க்கப் படுகிறது! குறிப்பாக பாஜக., தலைவர் அண்ணாமலை, நாங்கள் ஒத்த ஓட்டு பாஜக., இல்லீங்கண்ணா… ஊரக உள்ளாட்சியில் எங்கள் பிரதிநிதிகள் 381 பேர் வென்றிருக்கிறார்கள்… அதில் எங்கள் பெண் வேட்பாளர்கள் திமுக வேட்பாளர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று தெரிவித்த தகவலுக்கு எந்த ஊடகமும் முக்கியத்துவம் அளிக்கவில்லை!

தமிழகத்தையே தலைகுனிய வைக்கக்கூடிய அளவுக்கு வெறும் ஊழல் நடைபெற உள்ளது என்று மாநிலத்தின் நலன் சார்ந்த, அண்ணாமலை தெரிவித்த ஊழல் குற்றசாட்டு குறித்து, எந்த காட்சி ஊடகமும் விவாதம் நடத்தவில்லை. மாறாக ஒரே இரவில் யாரோ ஒரு பணியாளர் இந்தி தேசிய மொழி எனக் கூறியதையும், தனக்கு தமிழ் தெரியாது என்று கூறியதையும் வைத்து, முக்கியமான விவாதப் பொருளாக மாற்றி விவாதம் செய்தன.

இருப்பினும், இந்த விவகாரத்துக்கு அடி கொடுப்பது போல், பிரதமர் மோடி, தமிழக ஊடகங்கள் பாஜக., வெற்றியைப் பேசாவிட்டால் என்ன… நான் பேசுகிறேன். உலகமே கேட்கும் என்று தாமாக முன் வந்து, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில், தமிழக பாஜக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று தமிழிலேயே தெரிவித்தார்.

அதுவும், அண்ணாமலையின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து பதில் அளித்துள்ளார். அதில், தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் சக காரியகார்த்தாக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நன்றி.அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இப்போது, தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள், ஊழல் முன்னேற்பாடுகள், அரசியல் ரீதியில் மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் தேர்ந்த நாடகங்கள், ஊடகங்களின் இரட்டை வேடம் என அனைத்தையும், மத்திய அரசு நேரடியாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஆளும் தரப்புக்கு பிரதமர் மோடி உணர்த்தியிருக்கிறார். அதற்காகத்தான், ஆளுநர் ஒருவராக புலனாய்வுப் பிரிவு முன்னாள் அதிகாரியையும் அனுப்பியிருக்கிறார்.

கைது நாடகங்கள் மூலம் பழிவாங்கல் அரசியல், திசைதிருப்பல் அரசியல் என்று செயல்பட்டு, கோயில்களின் சொத்துகளை மறு பக்கம் கபளீகரம் செய்யும் ஆளும் தரப்புக்கு, அதிமுக., வேண்டுமானால் ஜால்ரா தட்டிக் கொண்டு, ஊழலில் பங்கு போட்டுக் கொள்ளலாம், ஆனால் பாஜக., சும்மா இருக்காது என்ற எதிர்க்கட்சி அரசியலின் மைய நாடியைப் பிடித்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே கடந்த அறுபதாண்டில், இதுவரை தமிழகத்தில் நடந்திராத ஒரு மாற்றம். தமிழகம் காணப் போகும் ஒரு மாற்றம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version