சென்னை: தமிழக பள்ளிகளில் மாணவர்கள் கையில் கலர் கலராக கயிறு, நெற்றியில் திலகம் அணிந்து வருவதை ஜாதி அடையாளமாக சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்குமாறு, ஹிந்து மத வெறுப்புடன் பயிற்சி எடுத்துக் கொண்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குறிப்பிட்டதாகவும், அதனால், தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்ததாகவும் கூறி, ஒரு சுற்றறிக்கை வெளியானது. இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை அடுத்து இந்த உத்தரவு திரும்பப் பெறப்படும் என்று கூறப் படுகிறது.
தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அண்மையில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப் பட்டிருந்தது.
அந்த சுற்றறிக்கையில், பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தமிழக பள்ளிகளை பார்வையிட்டபோது, ஒரு சில பள்ளிகளில் விளையாட்டு அணி தேர்வு செய்யும் போதும், மதிய உணவு இடைவேளை மற்றும் வகுப்பு நேரங்களிலும், குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள், அடையாளம் கண்டு ஒன்றுகூடிக் கொள்ளும் வகையில், தங்களது கையில் சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி நிற கயிறு கட்டியிருந்துள்ளனர்.
மோதிரம் அணிந்தும் நெற்றியில் திலகமிட்டும் உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என தங்களின் ஜாதி அடையாளத்தைக் காட்டியுள்ளனர். இதனால் மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுகிறது. ஜாதி பாகுபாடுகளை ஏற்படுத்தும் இதுபோன்ற வழக்கங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது! கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இச்சுற்றறிக்கையின் மீது நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையை, இணை இயக்குனர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என கூறப்பட்டது.
ஆனால், இத்தகைய சுற்றறிக்கை வெளியானதும், இந்து அமைப்புகள் தங்கள் எதிர்ப்புகளை கடுமையாக பதிவு செய்தன. இஸ்லாமிய கிறிஸ்துவ மாணவர்கள் மாணவிகள் உடை கலாசாரத்தை வெளியில் காட்டுகின்றனர், சிலுவையை வெளியில் தெரியும் வகையில் அணிந்து வருகின்றனர் அவர்கள் குறித்தெல்லாம் எதுவும் சொல்லப் படாததால், இது உள்நோக்கம் கொண்டது என்று கூறினர்.
இந்நிலையில் இந்தப் பிரச்னைக்கு பதிலளித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே என்ன நிலை இருந்ததோ அந்த நிலையே தொடரும் என தெரிவித்துள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள சாரண, சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பேசிய போது… பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள் கட்டியிருப்பது குறித்து, பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே ஏற்கெனவே என்ன நிலை இருந்ததோ அதே நிலை தொடரும் .. என்றார்.
இந்நிலையில், யார் அந்த பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்? அவர்கள் உள்நோக்கம் என்ன? ஏன் இத்தகைய கருத்துகளை அவர்கள் தெரிவித்தார்கள்? அவர்களின் பின்னணி என்ன என்று கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய உள்நோக்கம் கொண்டவர்கள் அதிகாரிகளாக வந்தால், என்ன என்ன பிரச்னைகளை ஏற்படுத்துவார்களோ என்ற அச்சம் சாதாரண மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குறித்து விசாரித்தறிய வேண்டும் என்று இப்போது சமூகத் தளங்களில் கோரிக்கைகள் வைக்கப் பட்டு வருகின்றன.