5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் அதே பள்ளியில் பொதுத்தேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கட்டாயம் என்று சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்வுக்கான அட்டவணை, விதிமுறைகள் ஆகியவற்றை வகுத்துள்ளது. இதில் மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியில் அல்லாமல் வேறு ஒரு தேர்வு மையத்தில் தேர்வெழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.
செப்டம்பர் 22ம் தேதி வெளியான அந்த அறிவிக்கையில், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு உட்பட்டும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளும் தேர்வு மையங்களை அமைக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குநரகம் அறிவுறுத்தியிருந்தது.
இது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேர்வெழுதும் சமயங்களில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,
இது தவறான தகவல் என்று பதிலளித்தார். இதேபோன்று பலமுறை பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிடுவதும், அதற்கு அமைச்சர் மறுப்பு தெரிவிப்பதும் அரங்கேறியுள்ளது.
இந்த சூழலில் 5, 8ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் அதே பள்ளியில் பொதுத்தேர்வு எழுதலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20க்கும் குறைவான மாணவர்கள் படித்தால் அருகில் உள்ள பள்ளியில் தேர்வு எழுத வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.