சென்னை:
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகும் என தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு – எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இத்தேர்வை 11 லட்சம் மாணவ- மாணவியர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் 19-ந்தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 19ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று முன்னதாகவே தேர்வுத் துறை அறிவித்திருந்தது. இது குறித்து இயக்குனர் வசுந்தராதேவி கூறியதாவது:-
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 19-ந்தேதி காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்படும். அரசின் இணைய தளங்களில் வெளியிடுவதோடு மாணவ-மாணவிகளின் செல்போன்கள் வழியாகவும் தெரிவிக்கப்படும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்காக பள்ளிகள் மூலமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும். தேர்வு முடிவுகள் பாதுகாப்புடன் அனைத்து மாவட்டத்துக்கு இன்று தனி வாகனங்களில் பாதுகாப்புடன் அனுப்பப்படுகிறது. முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக பள்ளிகளுக்கு 19-ந்தேதி காலை வினியோகிக்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு 19-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.