தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது! சுமார் 8.35 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர். இன்று மொழிப்பாடங்களுக்கான தேர்வு தொடங்கியது.
தேர்வினை நல்ல முறையில் எழுதி நிறைய மதிப்பெண்கள் பெற மாணவ மாணவிகளுக்கு பெற்றோரும் நண்பர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற ஆசிரியர்கள் தரும் டிப்ஸ்…
- நாம் அதிக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையுடன் தேர்வை அணுக வேண்டும். கவலை, அச்சம், படபடப்பு இவற்றை அறவே தவிர்த்து தைரியமாக தேர்வு அறையை நெருங்க வேண்டும்.
- பாடங்களை ஆர்வத்துடன் படிக்க வேண்டும். பாடங்கள் எளிதானவை, தேர்வும் எளிதானதுதான் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதையும் மனத்தால் விரும்பிச் செய்தால் கடினமாகத் தோன்றாது.
-
நம் படபடப்பை அதிகமாக்குவது, படித்தது மறந்து போவதுதான்! நினைவாற்றல் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்குக் காரணம் கவனம் இன்மை. படிக்கும் போது எவரிடமும் பேசாமல் படித்தலில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். பாட்டு கேட்டுக் கொண்டு, டி.வி. அல்லது மொபைல் போன், லேப்டாப் பார்த்துக் கொண்டு படித்தால், எதுவும் மனதில் தங்காது.
-
எழுதிப் பார்க்க வேண்டும். படித்தது நினைவில் இருந்தாலும், எழுதுவதில் சிலருக்கு வேகம் வராது. சிலர் பொறுமையாக எழுதிக் கொண்டிருப்பர். ஆனால் அதற்குள் நேரம் முடிந்து விடும். எனவே குறித்த நேரத்துக்குள் ஒன்றை எழுதி முடிக்க வேண்டும் என்ற கலையை வளர்த்துக் கொள்ளுங்கள். எனவே எழுதி எழுதிப் பாருங்கள்.
-
படிப்பதற்கு அதிக நேரம் செலவு செய்யுங்கள். அந்த நேரத்திலும், முக்கியமானவற்றை தவிர்த்து விடாமல் படியுங்கள். எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதைவிட, எப்படிப் படிக்கிறோம் என்பதே முக்கியம்.
-
தேர்வுக்குப் படிக்கும் போது, முன் கூட்டியே திட்டமிட வேண்டும். ஒரு நாளில் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். இரவு தூங்கப்போகும் முன் இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என்பதையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
எந்நேரமும் படித்துக் கொண்டே இருக்கக் கூடாது. உடலுக்கு தகுந்த ஓய்வும் தேவை. மூளைக்கு அதிக வேலை கொடுப்பதால் அதிக சக்தி செலவாகும். அதிகம் உண்டாலும், உறக்கம் வந்துவிடும். எனவே அளவாகவும் அதே நேரம் சத்துள்ள உணவாகவும் உண்ண வேண்டும்.
-
தங்கள் குழந்தைகளுக்காக, பெற்றோர் டி.வி. சீரியல்கள், சினிமாக்களை தியாகம் செய்ய வேண்டும். கூடுமான வரை, உங்கள் குழந்தைகளிடம் செல்போன் பயன்படுத்தக்கூடாது என கட்டாயப் படுத்துங்கள்.
பாட்டு கேட்பது, சினிமா பார்ப்பது, கம்ப்யூட்டர் மொபைல் போன் கேம்ஸ் போன்றவற்றுக்கு முழுமையாக தடை விதியுங்கள். குழந்தைகள் படிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அவர்கள் படிப்பதையும் உறுதி செய்து, கண்காணியுங்கள்.
நன்கு மதிப்பெண் பெற்றால் நமக்கும் மதிப்பு தான் என்பதை நீங்கள் உணர்வதுடன், பிள்ளைகளுக்கும் அந்த உணர்வை ஊட்டுங்கள்.
தேர்வில் வெற்றி பெறவும், நல்ல கிரேடு பெறவும் நம் வாழ்த்துகள்.