மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஜூலை 1ம் தேதி நடத்த முடிவெடுத்துள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜூலை 1ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடிவெடுத்துள்ளதாகவும், தமிழக உயர் கல்வித்துறை செயலாளரின் ஒப்புதலுக்குப் பின்னர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் விவரித்த போது, வினாத்தாள் திருத்தப் பட்டு, முடிவுகள் ஜூலை மாத இறுதிக்குள் தெரிவிக்கப் பட்டு விடும் என்றார். ஆசிரியர்கள் திருத்தப் போவது வினாத்தாளையா அல்லது விடைத்தாளையா என்று கேள்வி எழுப்புகிறார்கள் பேராசிரியர்கள் சிலர்.
அதே போல், இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, நாங்கள் 12 பல்கலை.,களின் துணைவேந்தர்கள் இணையவழி கூட்டம்போட்டு தீர்மானித்து அனுப்பி யிருக்கிறோம். இதனை ஆணையாகப் போட்டு உயர்கல்வி செயலர் அனுப்ப வேண்டும் என்று கோருகிறார். பல்கலைக்கழகத்தைப் பற்றி உயர்கல்வி அமைச்சர் துணைவேந்தர்களின் கூட்டம் நடத்தி பொது முடிவு எடுக்க வேண்டுமே தவிர, இவர்கள் 12 பேர் தனியாகக் கூட்டம் போட்டு அரசு ஆணை போட வேண்டும் என்று கேட்பது சரியா என்று வினவுகின்றனர் மூத்த பேராசிரியர்கள் சிலர்!?
செய்தியாளர் சந்திப்பில் மதுரை பல்கலை துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் தெரிவித்தவை….
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது… உயர்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி துணைவேந்தர்கள் எல்லாம் இந்தக் கல்வியாண்டின் போது மாணவர்கள் எப்போது பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டும் அவர்கள் அடுத்த கல்வி ஆண்டில் எப்போது தேர்வு எழுத வேண்டும் என்பது குறித்து விவாதித்து உயர் கல்வித் துறைக்கு பரிந்துரைசெய்ய வேண்டினார்கள்.
அதற்காக இரு நாட்களுக்கு முன்பு 12 துணை வேந்தர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினோம். ஒவ்வொரு அம்சங்களையும் பற்றி விவாதித்தோம். அதன் அடிப்படையில், முடிவுகளை எவ்வாறு எடுப்பது என்பது குறித்து விவாதித்தோம்
அதன்படி நாங்கள் சில முடிவுகளை எடுத்துள்ளோம். வருகிற ஜூலை மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் அந்த ஜூலை மாத இறுதியில் வெளியிடப்படும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்
வரும் கல்வியாண்டில் அதாவது 20-21 கல்வி ஆண்டில் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் பருவம் தொடங்கப்படும். முதல் பருவம் தொடங்கப்பட்டு நவம்பர் 23-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். 90 வேலை நாட்கள் இருக்க வேண்டும் என்பதற்காக நவம்பர் 23 வரை செல்கிறோம்.
ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 23 வரை இந்த ஆண்டின் ஒற்றை பருவ வகுப்புகள். அவற்றில், ஞாயிற்றுக்கிழமை தவிர முக்கிய விடுமுறை நாட்கள் தவிர வேறு எந்த நாட்களிலும் விடுமுறை விடப்பட்டது என்பதில் உறுதியாக இருக்கிறோம்,. வரும் நவ.24ம் தேதியில் இருந்து டிசம்பர் 13ஆம் தேதி வரை அந்த பருவத்தின் விடைத்தாள் திருத்தப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படும்
டிசம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு அடுத்த ஈவென் செமஸ்டர் என்று சொல்லக்கூடிய இரண்டாவது பருவம் தொடங்கும். அதாவது டிசம்பர் 14 தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறும். அப்போது 90 நாட்கள் வேலை நாள்கள் என்பதை கருத்தில் கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்,
அனைத்து கல்லூரி முதல்வர்களும் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்யவும் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் வேலை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். எனவே 90 நாட்கள் கல்லூரி வேலை நாட்கள் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜேந்திரன் அவர்களிடம் இதற்கான முடிவுகள் எடுக்க விட்டுவிட்டோம். அதன்படி, முடிவுகளை எடுத்து உயர் கல்வித்துறை செயலாளருக்கு பரிந்துரை செய்து இருக்கிறோம். இவை எல்லாம் சரியாக இருந்தால் அவர் அரசு ஆணையாக அனுப்பி வைப்பார்.
அதனை நாங்கள் முழுமையாக எடுத்து அமல் படுக்க தயாராக இருக்கிறோம். இது, அனைத்து பல்கலைக்கழகங்களும் சேர்ந்து எடுத்த முடிவு.
மாணவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம். வெளி மாநிலத்தில் இருக்கும் மாணவர்கள் இங்கு வந்து தேர்வு எழுதுவதற்கான சூழ்நிலையை சரியாக ஏற்படுத்தி வைப்போம். எனவே வெளிமாநில மாணவர்கள் எந்தவித கவலையும் பயமும் படவேண்டாம்.
தேர்வு எழுத அவர்கள் தயாராகலாம். தங்கள் படங்களில் கவனத்தை செலுத்தலாம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட விடுதிகளில் நோயாளிகள் எவரும் தங்கியிருக்கவில்லை. பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருபவர்களுக்கு தனிமைப் படுத்துவதற்காக இடம் மட்டும் தான் இங்கே அமைக்கப்பட்டு இருக்கிறது.
அவர்களிலும் பலர் குணமாகி வெளியே சென்று இருக்கிறார்கள். எனவே கொரோனா குறித்த அச்சம் பல்கலை வளாகத்தில் தேவையில்லை. நாங்கள் இந்த பல்கலைக்கழக வளாகத்தில் தான் தங்கி இருக்கிறோம் என்று கூறினார் கிருஷ்ணன்.