தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. தேர்வின்போது, எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், ஏற்பாடுகள் தொடர்பாகவும் இன்று முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு மையங்கள் எவ்வாறு அமைப்பது, மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுப்பது எப்படி என்பது பற்றியும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், தமிழகத்தில் தொடர்ந்து பள்ளிகள் பூட்டப்பட்ட நிலையில் இருக்கிறது. அது எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.
கொரொனா வைரஸ் பாதிப்பு முழுவதுமாக ஒழியும் வரை பள்ளிகளைத் திறக்க கூடாது என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் அதுபோன்ற பள்ளி திறப்பு நடவடிக்கைகளை எப்போது தொடங்கலாம் என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.