CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடப்படும், என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் CBSE பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் முதல் வாரம் வரை நடைபெற்றது.
ஊரடங்கு 12-ம் வகுப்பில் 29 பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வடகிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தேர்வுகள் நடைபெறும் போதே விடைத்தாள் திருத்தும் பணியும் நடைபெறும் என்றும், ஆசிரியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து, ஆகஸ்ட் 15-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், அதன் பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும், என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.