சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் எஸ்.கௌரி நியமிக்கப் பட்டுள்ளார். அவருக்கான நியமன உத்தரவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார். அடுத்து, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதைத் தொடர்ந்து இந்த பணியிடங்களில் தகுதியானவர்களை நியமிக்க இந்த இரு பல்கலைக்கழகங்களுக்கும் தனித்தனியாக குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தங்கள் பல்கலைக்கழகத்துக்கான துணை வேந்தர் பணிக்கு தகுதியானவர்கள் என தேர்வு செய்த 3 பேர் கொண்ட பட்டியலை ஆளுநரிடம் அளித்தது.
அந்தப் பட்டியலை பரிசீலித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.கவுரியையும், மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.சுகுமாரையும் நியமித்து உத்தரவிட்டார்.
இதற்கான நியமன ஆணையை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் இவர்களிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். இவர்களது பதவிக் காலம், அவர்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் அமலில் இருக்கும்.