தேர்வுக் கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதாக மதுரை காமராசர் பல்கலை., திருச்சி பாரதிதாசன் பல்கலை., இரண்டும் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரியர் பாடத் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், நீண்டகாலமாக அரியர் வைத்திருந்த மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இருப்பினும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஏஐசிடிஇ ஆகிய இரண்டும் அரியர் பாடங்களுக்கு தேர்வே எழுதாமல் தேர்ச்சி பெறுவதை ஏற்க மறுத்தன. மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி பின்னரே பட்டம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தன.
தேர்வே எழுதாமல் அரியர் பாடங்களில் தேர்ச்சி குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் தவிர மற்ற பல்கலைக்கழகங்கள் தேர்ச்சி வழங்க ஒப்புதல் அளித்தன. சென்னை பல்கலைக்கழகம் அண்மையில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இரண்டும் அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளன. அரியர் பாடங்களுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரியர் வைத்திருந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.