spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைபுதிய பாடத்திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலரிடம் அன்புமணி மனு

புதிய பாடத்திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலரிடம் அன்புமணி மனு

- Advertisement -

புதிய பாடத்திட்டம் குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துகள்: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அவர்களிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  மனு

பெறுநர்:
த. உதயச்சந்திரன் அவர்கள்,
செயலாளர் (புதியப் பாடத்திட்டம்),
பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு அரசு,
பள்ளிக்கல்வி வளாகம், சென்னை- 06

திரு. உதயச்சந்திரன் அவர்களுக்கு,

பொருள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான புதியப் பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கை மீதான பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துக்கள் – பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக

கல்வியின் நோக்கம் என்பது படித்த பட்டதாரிகளை உருவாக்குவது மட்டுமல்ல. ஆழ்ந்து சிந்திக்கவும், ஆராய்ந்து விமர்சிக்கவும் கூடிய மனிதர்களை உருவாக்குவது தான் கல்வியின் முதன்மை நோக்கமாகும். அத்தகைய கல்வி முறையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைத்து வருகிறது. கல்வி சுகமானதாகவும், சுமையற்றதாகவும், கற்றல் மற்றும் அதைச் சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதாகவும், விளையாட்டு, தொழிற்பயிற்சி ஆகியவற்றை ஓர் அங்கமாகவும் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் விருப்பம்.

தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் அளவுக்கு பாடத்திட்டம் வலிமையாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, இத்தகைய பாடத் திட்டத்தை உருவாக்குவதற்காக கடந்த காலங்களில் ‘‘காலத்திற்கேற்ற கல்வித் திட்டம்’’ என்ற தலைப்பில் 3 நாள் கருத்தரங்கம் நடத்தி அரிய ஆலோசனைகளை வழங்கியது உள்ளிட்ட ஏராளமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. தமிழக மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் முன்முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை புதியப் பாடத்திட்டத்திற்கான வரைவை தயாரித்து பொதுமக்கள் பார்வைக்காக தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

இப்பணியை சிறப்பாக மேற்கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினருக்கும், இப்பணியை ஒருங்கிணைத்த பள்ளிக்கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரனுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். புதியப் பாடத் திட்டம் குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துக்களையும், யோசனைகளையும் வல்லுனர் குழுவின் ஆய்வுக்காக தாக்கல் செய்கிறோம்….

மேனிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம்

தமிழ்

1. தமிழ் மொழிப் பாடத்திற்கான கலைத் திட்டம் மாணவர்களின் மொழி அறிவைப் பெருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அறிவியலும், தமிழும் இணைந்த மொழிக் கலைச்சொற்களை பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பிறமொழி கலப்பின்றி பேச பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், அவற்றின் பயன்பாடு சார்ந்து அவற்றுக்கு நல்ல தமிழ்ப் பெயரை மாணவர்கள் சூட்டும் வகையில் சொற்பிறப்பியலின் (Etymology) அடிப்படைகள் மாணவ, மாணவியருக்கு கற்றுத்தரப்பட வேண்டும். இதன்மூலம் தமிழில் புதிய சொற்கள் பிறக்கும்.

2. மேல்நிலை வகுப்புகளில் மாணவர்கள் விளம்பர வாசகங்கள் எழுதுதல், செய்தி சேகரித்து எழுதுதல் உள்ளிட்ட பயிற்சிகள் கற்றல் விளைவுகளாக இல்லாமல் தேர்வு மதிப்பீடுகளாக அமைய வேண்டும். அத்துடன் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த முடியும்.
3. துணைப்பாடமாக அரசு நிர்வாகம் சார்ந்த நாடகங்கள் சேர்க்கப்படும் என்று வழிகாட்டப்பட்டிருக்கிறது. மன்னர் காலத்து அரசு நிர்வாகங்களை விளக்குவது மட்டுமின்றி, நிகழ்கால அரசியல், அரசு நிர்வாகம், நல்ல நிர்வாகம் அமைய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கற்பிக்கப்பட வேண்டும்.

4. தமிழ் மொழிப்பாடத்தின் செய்யுள் மற்றும் உரைநடையில் இயற்கை, சுற்றுச்சூழல், தமிழரின் நீர்மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதை வெறும் பாடமாக மட்டும் நடத்தாமல் இயற்கை, சுற்றுச்சூழல், தமிழரின் நீர்மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வசதியாக களச் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
5. தமிழ் சார்ந்த கணினிப் பயன்பாடுகளை அதிகரிக்க வேண்டும். துணைப் பாடங்களில் நன்னெறியை போற்றும் பாடங்களை சேர்க்க வேண்டும்.

6. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கூட தமிழை முதன்மை மொழிப் பாடமாக படிப்பது குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் தமிழ் மொழிப் பாடம் கடினமாக இருப்பதால் அதில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என்பதும், பிரெஞ்ச், சமஸ்கிருதம் போன்ற பாடங்கள் மிகவும் எளிமையாகவும், அதிக மதிப்பெண் பெறக் கூடியதாக இருப்பதும் தான். இந்த நிலையை மாற்றி பிற மொழிகளை தாய்மொழிகளாகக் கொண்டவர்களும் தமிழை முதன்மை மொழிப்பாடமாக கற்கும் வகையில் தமிழ் பாடத்தையும், தேர்வையும் எளிமையாக்கி அதிக மதிப்பெண் வழங்க வேண்டும்.
ஆங்கிலம்
1. வங்கியில் பணம் செலுத்துவதற்கான படிவம், தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு படிவம் உள்ளிட்ட படிவங்களை நிரப்பும் பயிற்சி 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவது மிகவும் தாமதமானது ஆகும். உயர்நிலை வகுப்புகளிலேயே இந்தப் பயிற்சியை வழங்க வேண்டும்.

2. தமிழ்நாட்டு மாணவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் சரளமாக ஆங்கிலம் பேச வராததும், நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விகளை புரிந்து கொண்டு பதிலளிப்பதில் உள்ள தயக்கமும் அவர்களின் வேலைவாய்ப்புக்கு பெரும் தடையாக உள்ளது. இக்குறையை போக்க அறிவியல் பாடங்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படுவதைப் போன்று ஆங்கிலத்தை சரளமாக பேசுதல், நேர்காணலில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளித்தல் ஆகியவற்றை செய்முறைத் தேர்வாக (Practical Examination) நடத்தி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும். இதற்கு மாணவர்கள் தயாராவதால் அவர்களின் ஆங்கிலம் பேசும் திறன் அதிகரிக்கும்.

3. உயர்நிலை மற்றும் மேனிலை வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில மொழி வார்த்தைகளை சரியாக பேசுவதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இதற்காக மொழி ஒலிப்பியலை (Phonetics) ஆங்கிலப் பாடத்தின் ஓர் அங்கமாக மாற்ற வேண்டும்.

4. ஆங்கில மொழித்திறனை வளர்க்கும் வகையில் செய்தி வாசித்தல், குழு விவாதம், நேர்காணல் பயிற்சி, நிகழ்ச்சி வர்ணனை, கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான உரை தயாரித்தல் ஆகியவை குறித்த பயிற்சி வழங்கப்படுவது மகிழ்ச்சி. இதை மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டும்.

5. ஆங்கிலம் என்பது பெரும்பாலான மாணவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் பாடமாகவே உள்ளது. இதை மாற்றி மாணவர்கள் ரசிக்கும் வகையிலான கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

6. சென்னையிலும், பிற மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் ஆங்கில மொழி கருத்தரங்குகளில் மாணவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும். அத்தகைய கருத்தரங்குகளில் பங்கேற்றதன் மூலம் மாணவர்கள் கற்றுக்கொண்டது என்ன? என்பதை மதிப்பிட வேண்டும்.

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள்

1. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான கலைத்திட்டங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. கலைத்திட்டங்களில் மாற்றங்களைச் செய்வதற்கான வாய்ப்புகளும் குறைவு.

2. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் முற்றிலும் புதுமையாகவும், மாணவர்களின் சிந்திக்கும் திறனை சோதிக்கும் வகையிலும் உருவாக்கப்பட வேண்டும். பாடத்திற்கு பின்னால் உள்ள வினாக்கள் பட்டியலில் இருந்து மட்டும் தான் தேர்வில் வினா எழுப்பப்படும் என்ற நிலையை மாற்றி, பாடத்தில் எந்த பகுதியிலிருந்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வினா எழுப்பப்பட்டாலும் அவற்றுக்கு மாணவர்கள் உடனடியாக பதிலளிக்கும் வகையில் பாடம் எழுதப்பட வேண்டும்; நடத்தப்பட வேண்டும்.

3. அறிவியல் பாடங்கள் மிகவும் ஆழமாகவும், நிகழ்காலத் தேவைகளுடன் தொடர்புப் படுத்தியும் பாடங்கள் தயாரிக்கப்பட வேண்டும். உதாரணமாக ‘இராமன் விளைவு’ என்பது மிகவும் சாதாரணமாக சொல்லித் தரப்படுகிறது. அதன் சிறப்புகள் விளக்கப்படுவதில்லை. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இராமன் விளைவு எவ்வாறு ஏற்படுகிறது என்பது குறித்து விரிவாக விளக்கப்படுவதுடன், நிகழ்காலத் தேவைகளுக்கு எந்த வகையில் உதவுகின்றன என்பதும் கற்றுத் தரப்படுகிறது. அதன் மூலம் இராமன் விளைவு குறித்த அனைத்து விவரங்களும் மாணவர்கள் மனதில் பதிகின்றன. அதேபோன்ற பாடத் தயாரிப்பையும், கற்பித்தல் முறையையும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்திற்கும் கொண்டுவர வேண்டும்.

4. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கான சூத்திரங்களை மனப்பாடம் செய்யும் வழக்கம் தான் இன்று வரை நீடிக்கிறது. இதனால் அந்த சூத்திரங்களின் பயன்பாடுகள் பெரிதாக யாருக்கும் புரிவதில்லை. இதற்கு மாறாக சூத்திரங்களை உதாரணங்களின் மூலமாகவும், செயல்முறை மூலமாகவும் மாணவர்கள் தெளிவாக புரிந்து கொண்டு வாழ்க்கையிலும் பயன்படுத்தும் வகையில் பாடநூல்கள் தயாரிக்கப்படவேண்டும்.

5. செய்முறைத் தேர்வுகள் அனைத்து பள்ளிகளிலும் வெறும் சடங்குகளாகி விட்டன. தமிழகத்தில் பல பள்ளிகளில் செய்முறைக்கான ஆய்வகங்களே இல்லாத நிலையில், செய்முறைத் தேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் 100% மதிப்பெண் வழங்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. எனவே, செய்முறைத் தேர்வுகளை பயனுள்ளதாக மாற்ற வேண்டும். அனைத்து மாணவர்களின் செய்முறைத் திறனையும் தனித்தனியாக சோதித்து மதிப்பெண் வழங்கும் வகையில் செய்முறைத் தேர்வின் வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

வரலாறு

1. மேனிலை வகுப்புகளுக்கான வரலாற்றுப் பாடத்திட்டத்திற்கான கலைத்திட்டம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. விடுதலைப் போராட்டம், பக்தி இயக்கம், கிளர்ச்சி, மன்னர்கள் ஆகியவற்றின் பொதுவான வரலாற்றின் ஒரு பகுதியில் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு நிகழ்வுகள் குறித்த சிறு குறிப்பு வருகிறதே தவிர தமிழ்நாட்டு வரலாறு குறித்து விரிவாக எந்தப் பதிவும் செய்யப்படாதது பெரும் குறையாக உள்ளது.

2. சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு தான் என்பது ஒட்டுமொத்த இந்தியாவும் அறிந்த ஒன்றாகும். இந்தியாவின் பெரிய மாநிலங்களில் அதிக அளவில் இட ஒதுக்கீடு வழங்குவது தமிழ்நாட்டில் மட்டும் தான். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இரு அடுக்குகளாக 50% இட ஒதுக்கீடு வழங்குவதும் தமிழகம் மட்டும் தான். இத்தகைய சிறப்புகள் குறித்தெல்லாம் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இட ஒதுக்கீட்டு வரலாறு குறித்து தனி அத்தியாயம் சேர்க்கப்பட வேண்டும்.

3. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட தமிழக அரசியல் குறித்த அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் மேனிலை வகுப்புக்கான வரலாற்று பாடநூலில் தமிழக அரசியல் வரலாறு குறித்த எந்த பதிவும் இல்லாமல் இருப்பது தவறாகும். அதைப் போக்கும் வகையில் தமிழக அரசியல் குறித்து தனி அத்தியாயம் வரலாற்றுப் பாடநூலில் சேர்க்கப்பட வேண்டும்.

4. இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிக அளவில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் ஆதிச்சந்ல்லூர், கீழடி, புதுவையில் அரிக்கமேடு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மற்றும் அவற்றில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் மூலம் தெரியவந்த பொருட்கள் குறித்த அத்தியாயமும் பாடநூலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

5. தமிழ்நாடு உள்ளிட்ட மொழிவாரி மாநிலங்கள் உருவான விதம், அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்து வருங்காலத் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே, அதுகுறித்த பாடமும் வரலாறு பாட நூலில் சேர்க்கப்படுவது நலமாக இருக்கும்.

ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை

தமிழ்

1. தொடக்க நிலை (1&5 வகுப்புகள்), உயர்தொடக்க நிலை (6,7,8 வகுப்புகள்), உயர்நிலை (9,10 வகுப்புகள்) வகுப்புகளுக்கான தமிழ் பாடத் திட்டம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் வலிப்பிலேயே கணினி மூலம் பாடல்கள் கற்பிக்கப்படுவதால் அடுத்தடுத்த வகுப்புகளில் குழந்தைகள் அச்சமின்றி கணினிகளை கையாள உதவியாக இருக்கும்.

2. மூன்றாம் வகுப்பில் சொல் விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் குழந்தைகளின் மொழித்திறனை மேம்படுத்தும் முயற்சி நிச்சயம் பயனளிக்கும். நான்காம் வகுப்பில் விளம்பரங்களை உருவாக்குதல், கட்டுரை எழுதுதல் போன்றவை குழந்தைகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவும்.

3. நான்காம் வகுப்பிலிருந்து திருக்குறள் கற்பிக்கப்படும் என்று கலைத்திட்டத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முதல் வகுப்பிலேயே பாடல்கள் ஒலி வடிவில் கற்பிக்கப்படும் நிலையில், திருக்குறளை மூன்றாம் வகுப்பிலிருந்தே அறிமுகம் செய்வது மானவச் செல்வங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

4. உயர்தொடக்க வகுப்புகளில் கூட்டங்களில் உரையாற்றுதல், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், எந்த ஒரு பொருள் சார்ந்தும் அறிக்கை தயாரித்தல் போன்ற மொழித்திறன் பயிற்சிகள் உண்மையாகவே பயனளிப்பவை. எனினும் இவை ஏட்டில் மட்டுமே இருக்கக்கூடாது. இப்பயிற்சிகளால் மாணவர்கள் எந்த அளவுக்கு மேம்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய மதிப்பீடுகள் தேவை.

5. 9, 10 ஆகிய உயர்வகுப்புகளுக்கான துணைப் பாடம் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பதாகவும், நன்மை, தீமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைக்கப்பட வேண்டும்.

ஆங்கிலம்

1. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலப் பாடம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நிலையில், தொடக்க வகுப்புகளில் ஆங்கிலத்தை எளிதாக கற்கும் வகையில் கலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

2. ஐந்தாம் வகுப்பிலிருந்து காணொலிக் காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்கப்படுவது அவர்களின் மொழி பேசும் திறனை மேம்படுத்தும்.

3. சொல் விளையாட்டுக்கள் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதால் மாணவர்கள் மனதில் தெளிவாக பதியும். முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் கற்றுத்தரப்படுவதால் அம்மொழி குறித்து மாணவர்களிடையே நிலவி வந்த அச்சம் விலகும்.

4. மேனிலை வகுப்புகளுக்கான பயிற்சியாக வைக்கப்பட்டுள்ள வங்கியில் பணம் செலுத்துவதற்கான படிவங்களை நிரப்புதல், தொடர்வண்டி முன்பதிவு படிவங்களை நிரப்புதல் போன்றவை 9&ஆம் வகுப்பிலிருந்தே அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

5. ஒரு பாடத்தை படித்து முடித்தவுடன் அதை நாடகமாக மாற்றுதல், வானொலி நாடகத்திற்கான திரைக்கதையாக மாற்றுதல் போன்றவை மாணவர்களின் படைத்தல் திறனை மேம்படுத்தும்.

கணிதம், அறிவியல்

1. கணிதம், அறிவியல் பாடங்களை தனித்த பாடமாக மற்றும் கற்றுத் தராமல் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திக் கற்றுத்தர வேண்டும். அப்போது தான் கணிதம், அறிவியல் ஆகியவற்றின் மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படும்.

2. உதாரணமாக 17 & (3*4) என்ற கணிதத்தை அப்படியே கேள்வியாக வைப்பதற்கு பதிலாக ஒருவரிடம் 17 கொய்யாப்பழங்கள் உள்ளன. அதை ஒவ்வொருவருக்கும் தலா 4 வீதம் 3 பேருக்கு கொடுத்தால் மிச்சம் எவ்வளவு இருக்கும்? என்று வினா எழுப்பலாம்.

3. ஒன்றாம் வகுப்பிலேயே கணினி வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும் நிலையில் அறிவியல் சார்ந்த நிகழ்வுகள், தத்துவங்களை விளக்க கணினியை பயன்படுத்தி படக்கதைகளை சொல்லலாம்.

4. கணிதம், அறிவியல் பாடங்களைப் பொருத்தவரை மாணவர்களின் சிந்தனைத் திறனைத் தூண்டும் வகையில் பாட நூல்கள் எழுதப்பட வேண்டும்.

5. அறிவியல், கணிதம் பாடங்களை மாணவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்பதை அறியும் வகையில் தேர்வு முறையும், வினாத் தாள்களும் அமைக்கப்பட வேண்டும்.

சமூக அறிவியல்

1. தொடக்கக் கல்வியில் சமூக அறிவியல் பாடம் மூன்றாம் வகுப்பில் தான் அறிமுகம் செய்யப்படுகிறது. சமூக அறிவியல் பாடத்தை பயில சற்று பக்குவம் தேவை என்பதால் இது சரியான முடிவு தான்.

2. சமூக அறிவியலின் ஓர் அங்கமான குடிமையியலில் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல தலைப்புகளில் பாடங்கள் தயாரிக்கப்படவிருப்பது பாராட்டத்தக்கது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், மக்களாட்சி, உள்ளாட்சி, மகளிருக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட பல தலைப்புகளில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் தயாரிக்கப்படவுள்ளன.

3. எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலில் ஒன்பதாவது பாடமாக மகளிரின் நிலை என்ற தலைப்பில் கடந்த காலங்களில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்து விளக்கப்படவுள்ளது. சி.பி.எஸ்.பி பாடத்திட்டத்தில் மகளிர் நிலை குறித்த பாடத்தில் தான் நாடார் சமுதாயத்தை பிழைப்பு தேடி வந்தவர்கள் என்றும், அவர்கள் பூர்வகுடிகள் அல்ல என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக அரசு தயாரிக்கும் பாடநூல்களில் இத்தகைய தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. தமிழக அரசியல் குறித்தும், நீதிக்கட்சி வளர்ச்சி குறித்தும் பல பாடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. திராவிட இயக்கத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து பாடங்கள் எழுதப்படவுள்ளன. இவற்றில் ஆட்சியாளர்களை துதிபாடும் வகையில் தவறான வரலாறு எதுவும் சேர்க்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

5. வரலாற்றுப் பாடத்தில் களப்பிரர்கள் காலம் வரையிலான பழங்காலத் தமிழகம் என்ற பாடத்தலைப்பு இடம் பெற்றிருக்கிறது. ஆனால், தற்கால நிலைமை குறித்து எந்தப் பாடமும் இடம்பெறாதது பெரும் குறை தான்.

பொதுவான பரிந்துரைகள்

1. தமிழக அரசால் அமைக்கப்பட்ட கலைத்திட்டக் குழுவினர் தயாரித்துள்ள புதியப் பாடத்திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டுமானால் மிகப்பெரிய அளவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கான நிதியை தமிழக அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

2. கோத்தாரிக் குழு பரிந்துரைப்படி, கல்விக்காக மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் குறைந்தது 6% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதன்படி ஆண்டுக்கு குறைந்தது ரூ.70,000 கோடி கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும். அது சாத்தியமாகாவிட்டால் ரூ.57,500 கோடி (5%) ஒதுக்க வேண்டும்.

3. புதியப் பாடத்திட்டத்தை ஆசிரியர்கள் சிறப்பாக உள்வாங்கிக் கொள்ளாவிட்டால் அவர்களால் மாணவர்களுக்கு தரமாக கல்வி கற்பிக்க முடியாது. அதனால் புதியப் பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

4. ஆந்திரம், இராஜஸ்தான் மாநிலங்களின் பாடத்திட்டம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. அதேபோன்று தரமானப் பாடத்திட்டத்தை பின்பற்றும் மாநிலங்களுடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் செய்து கொண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களையும், பிற மாநில அரசு பள்ளி மாணவர்களையும் ஆண்டுக்கு ஒரு மாதம் பரிமாற்றம் செய்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கல்வித் திட்டத்தில் உள்ள சிறப்பான அம்சங்களை கற்றுக் கொள்ள வகை செய்ய வேண்டும்.

5. அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு செலவிலான கல்விச் சுற்றுலாவை கட்டாயமாக்க வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று அதன் மூலம் மாணவர்கள் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

6. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகும் 4 தனிக்கல்வி வாரியங்கள் நீடிப்பது முறையல்ல. அனைத்துக் கல்வி வாரியங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும். மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திலும் ஒரே மாதிரியான பாட நூல்கள் பயன்படுத்தப்படுவதை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும்.

7. தேர்வு முறையிலும், மதிப்பீட்டு முறையிலும் சீர்திருத்தம் செய்யாமல் மாணவர்களின் கற்றலையும், புரிதலையும் மேம்படுத்த முடியாது. எனவே, தேர்வு முறையில் விரிவான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

8 தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்குவது குறித்து வல்லுனர் குழு எந்த பரிந்துரையும் வழங்க வில்லை. கல்வி வணிகமாவதைத் தடுக்கும் வகையில் தமிழ் வழிக் கல்வியை பத்தாம் வகுப்பு வரையாவது முதல் கட்டமாக கட்டாயமாக்க வேண்டும்.

9. மாணவர்களிடையே ஒழுக்கத்தை ஏற்படுத்த வசதியாக நீதிபோதனை வகுப்புகள் கட்டாயமாக்கப் பட வேண்டும். வாரத்திற்கு 5 பாட வேளைகள் விளையாட்டிற்கும், 3 பாட வேளைகள் தொழில் பயிற்சிக்கும், இரு பாட வேளைகள் நீதி போதனைக்கும் ஒதுக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அத்துடன் யோகா பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

10. பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களாக ( School Management Committee) மாற்றப்படும். பள்ளியின் தேவைகள் தொடர்பான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தும் அதிகாரம் இந்த குழுவுக்கு வழங்கப்பட வேண்டும்.

11. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாகத் தமிழக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். மாணவர்களுக்கான தனிநபர் கல்விச் செலவு உயர்த்தப்பட வேண்டும்.
12. பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளித் தர இயக்குனர் (Director of School Standards) நியமிக்கப்பட வேண்டும்.

13. புதியப் பாடத்திட்டம் அதற்குரிய பயனை அளிக்க வேண்டுமானால் பாடநூல்கள் தான் மிகவும் முக்கியமானவை. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை விட தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் சிறப்பாக அமையும் வகையில் பாடநூல்கள் வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும்.

14. பள்ளிகளில் திறன் சார் கல்வி (Skill Based Education), அறிவுசார் கல்விமுறை (Knowledge Based Education), தொழில்கல்வி (Vocational Education) ஆகிய கல்வி முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதன்படி 11 ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டும். அது மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

15. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9&ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

16. தொடக்கப்பள்ளிகளில் குறைந்தது 5 வகுப்பறைகளும், 5 ஆசிரியர்களும் இருக்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும். ஊரகப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்துள்ள இந்த யோசனைகளை வல்லுனர் குழு மூலம் ஆய்வு செய்து பயனுள்ளவற்றை பாடநூலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!

அன்புடன்,

(மருத்துவர் அன்புமணி இராமதாஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe