வரும் ஏப். 8ஆம் தேதி முதல், ப்ளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகளை மீண்டும் நடத்த, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு, ஆன்லைன் வழியே வகுப்புகள் நடைபெற்று வந்தாலும், பள்ளிக் கல்வி இறுதி வகுப்பான ப்ளஸ்-2 வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் ஏப்.6 செவ்வாய்க்கிழமை நாளை நடைபெறும் நிலையில், ப்ளஸ்-2 மாணவர்களுக்கு நாளை மறுதினம் வரையிலும் நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
தேர்தல் வாக்குப் பதிவு முடிந்ததும் வரும் ஏப்.8ஆம் தேதி முதல், மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
ப்ளஸ்-2 மாணவர்களுக்கு மே 3ஆம் தேதி தொடங்கி பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால், அதற்குள் மாணவர்களுக்கு இரண்டாவது ஆயத்த தேர்வுகளை நடத்தவும், ஆய்வக பயிற்சிக்கான செய்முறைத் தேர்வுகளை ஏப்ரலிலேயே நடத்தி முடிக்கவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.