கட்டுரை: கமலா முரளி
பத்தாம் வகுப்புத் தேர்வும் தேர்ச்சியும்! பத்தும் பன்னிரண்டும்!
பொறியியலா ? மருத்துவமா ? கலை அறிவியல் பட்டமா? சட்டம் மற்றும் வேறு தொழிற்கல்வியா? – என மாணவர்கள் தங்கள் அடுத்த கட்ட கல்விப் பயணத்தைத் தொடர பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளும் தேர்ச்சியும் அத்தியாவசியமானது.
பத்தாம் வகுப்புத் தேர்வும் தேர்ச்சியும் மாணவர்களின் கல்லூரிக் கல்வியின் பாதைக்குத் தயார் செய்யும் அல்லது முடிவு செய்யும் காரணியாக இருக்கிறது எனச் சொல்ல வேண்டும்.
பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் விருப்பம், திறன், மதிப்பெண்களின் தாக்கம் என்பதையெல்லாம் பார்த்து பதினொன்றாம் வகுப்பில் தேவையான பாடங்களை எடுத்துப் படிக்க வைக்கிறார்கள்.
ஆனால், இந்த கொரோனா படுத்தும் பாடு !
20- 21 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேர்முக வகுப்புகள் சரிவர நடக்கவில்லை. இணைய வழி வகுப்புகள் நடந்துள்ளன.
தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிப்புகள் முதலில் வந்தாலும், கொரோனா சூழலின் காரணமாக தேர்வுகள் நடக்கவில்லை.
சி.பி.எஸ்.சி முடிவுகள்
சி.பி.எஸ்.சி சமீபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்பது பற்றி பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சி.பி.எஸ்.சி பத்தாம் வகுப்பைப் பொறுத்த வரை ஒவ்வொரு பாடத்திலும் மொத்தம் 100 மதிப்பெண்கள். அதில் 20 மதிப்பெண்கள் உள்மதிப்பீட்டு முறையில் தரப்படுகிறது. அதற்கான விதிமுறைகள் கடந்த கல்வியாண்டிலிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. மீதமுள்ள 80 மதிப்பெண்களை எவ்வாறு வழங்குவது என்பதையும் தற்போது விளக்கியுள்ளார்கள். அலகுத் தேர்வுகள், பருவத் தேர்வுகள் மற்றும் மாதிரித்தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.
பெரும்பாலான ( எல்லா என்று படித்துக் கொள்ளலாம்) சி.பி.எஸ்.சி பள்ளிகள் தேவையான தரவுகளை வைத்துள்ளன. அநேகமாக எல்லாப் பள்ளிகளும் இணைய வழியில் பாடம் நடத்தி, தேர்வுகளும் வைத்துள்ளன.
சி.பி.எஸ்.சி பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் பள்ளிகளால் தயாரிக்கப்படும். பிறகு மத்தியக் கல்வி வாரியத்தால் தரம் சரி பார்க்கப்பட்டு, முடிவுகள் அதிகாரபூர்வமாக ஜூன் மூன்றாம் வாரம் வெளியிடப்படும் என எதிபார்க்கப்படுகிறது.
கொரோனா சூழல்கள் தான் இறுதி முடிவை எடுக்குமோ தெரியவில்லை !
தமிழக அரசுத் தேர்வு முடிவுகள்
தமிழக அரசும் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்துள்ளது. கடந்த ஆண்டிலும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், சென்ற ஆண்டு காலாண்டு, அரையாண்டு மற்றும் மாதிரித் தேர்வுகள் நடைபெற்று இருந்ததால், மாணவர்களுக்கான மதிப்பெண்களை வழங்குவதற்குத் தேவையான தரவுகளைத் தயார் செய்ய முடிந்தது.
இந்த வருடமும் தமிழக அரசு, பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியுற்றதாக அறிவித்துள்ளது.
தொடர்ச்சியான இணைய வழிக் கல்வி, பருவத் தேர்வுகள்,ஆசிரியர்களின் நேரிடையான மதிப்பீடு போன்றவை தரமாகவும், நுட்பமாகவும் இருக்குமா அல்லது எல்லா மாவட்டங்களிலும், எல்லாப் பள்ளிகளிலும் நடந்திருக்குமா என்பதும், இந்த நெருக்கடியான நேரத்தில் சந்தேகம் தான் !
சில தனியார் பள்ளிகளில் இணைய வழிப் பாடங்கள், தேர்வுகள் சற்று திறம்பட நடந்துள்ளதாகவும், மாவட்ட அளவில் அல்லது சிறு குழும அளவில் மாதிரித் தேர்வுகள் நடத்தி உள்ளதாகவும் தெரிகிறது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்குவது என்பது பற்றி கல்வியாளர்களும், அதிகாரிகளும் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
பதினொன்றாம் வகுப்பில் எந்த பாடப் பிரிவில் மாணவர்களைச் சேர்ப்பது என்பதற்கு, பத்தாம் வகுப்பு மதிப்பெண்களே ஆதாரமாக இருக்கும் சூழலில், பள்ளிகள், பெற்றோர்கள், அதிகாரிகள், மாணவர்கள் என அனைவருக்குமே இது ஒரு சிக்கலான சூழல் தான் !
கட்டுரையாளர், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முதுகலைப் பட்டமும் பெற்று, ஆசிரியராக கல்விப் பணியில் 28 ஆண்டுகள் பணிபுரிந்தவர். கேந்த்ரிய வித்யாலயா அகில இந்திய சிறந்த ஆசிரியருக்கான பரிசு பெற்றவர்.