பார்ஷியாலிடியை தவிர்த்தால் ஃபேஸ்புக் நட்பில் மோதல்களைத் தவிர்க்கலாம்…
ஃபேஸ்புக்கில் நாம் பதிவிடும் பதிவுகளுக்கு எத்தனையோ பேர் கமெண்ட் செய்திருப்பார்கள். பலர் பேர் லைக் செய்திருப்பார்கள். ஒருசிலர் படித்து ரசிப்பார்கள். லைக்கும் கமெண்டும் போடுவதற்கு தயங்கி கடந்து செல்வார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.
நம் பதிவு பயனுள்ளதாக இருந்தால் அவை மேடை பேச்சுகளிலும், விழா மேடைகளிலும், கல்விக்கூடங்களிலும் என எங்கேனும் எடுத்தாளப்பட்டுக் கொண்டிருக்கும்.
எனவே தொடர்ச்சியாக ஃபேஸ்புக்கில் பதிவிடும் நண்பர்கள் கமெண்ட்டுகள், லைக்குகள் குறித்து கவலைப்படாமல் எழுதிக்கொண்டே இருங்கள்.
ஆனால் உங்கள் பதிவுக்கு உங்கள் மனதுக்குப் பிடித்த எழுத்தாளர்களோ, ஓவியர்களோ அல்லது இன்னபிற துறைசார்ந்த பிரபலங்களோ கமெண்ட் செய்திருந்தால் அதை மட்டும் குறிப்பிட்டு ‘இன்னார் எனக்கு கமெண்ட் செய்திருந்தார்… மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’ என அதைத் தனிப்பதிவாக போட்டு உங்கள் பதிவுக்கான மதிப்பைக் கூட்டுவதாக நினைத்து உங்களை நீங்களே கீழே இறக்கிக்கொள்ள வேண்டாம்.
உங்கள் பதிவுக்கு கமெண்ட், லைக் செய்திருந்த ஒவ்வொருவருமே அதி முக்கியமானவர்கள்.
எனவே யாரையும் தனியாகக் குறிப்பிட்டு (அவர்கள் எத்தனை பெரிய பிரபலமாக இருந்தாலும்…) நன்றி தெரிவிக்காமல் இருப்பது உங்கள் மீதான மதிப்பைக் கூட்டும்.
பொதுவெளியில் எழுதும் பதிவுகளுக்கு பொதுவில் கமெண்ட் செய்யும் அன்பர்கள் அனைவருக்கும் பொதுவில் நன்றி தெரிவிக்க வேண்டும். ‘பார்ஷியாலிட்டி’ வேண்டாமே!
சமையல் செய்யும்போது காரம் அதிகம் சாப்பிடாதவர்களுக்காக காரம் போடாத காயை தனியாக எடுத்து வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு கொஞ்சம் காரம் கூடுதலாய் சேர்ப்பதைப் போல… உங்கள் அபிமானவர்களுக்கு உங்கள் நன்றியையும், மகிழ்ச்சியையும் ‘சற்றுக் கூடுதலாக’ தெரிவிக்க விரும்பினால் தனியாக மெசஞ்சர், வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம்.
லைக்கும் கமெண்ட்டும் செய்யும் அன்பர்களை / வாசகர்களை தக்க வைத்துக்கொள்ளவும், அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கவும் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது ஒன்றுதான்.
அதுபோல ஒருவரின் ஃபேஸ்புக் பதிவுகளை எடுத்தாள்பவர்கள் யாருடைய பதிவை எடுத்தாள்கிறார்களோ அவர்களின் பெயரை மறக்காமல் குறிப்பிட்டு அவர்களுக்கு கிரெடிட் கொடுப்பதுதான் அவர்களின் படைப்புக்கு கொடுக்கும் மரியாதை.
ஃபேஸ்புக்கிலேயே பகிர நினைத்தால் அப்படியே ஷேர் செய்யுங்கள். காப்பி பேஸ்ட் வேண்டாம்.
இதுபோல சின்ன சின்ன விஷயங்கள் ஃபேஸ்புக் நட்புகளில் ஏற்படும் மோதல்களை தவிர்க்க உதவும்.
– காம்கேர் கே. புவனேஸ்வரி
கட்டுரையாளர் குறித்து…
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்
ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/ http://compcaresoftware.com/