புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 35 ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு துறைகளில் 41 ஸ்டொனோகிராபர் பணியிடங்கள் நிரப்பப்படும் என கடந்த 12.01.2016ல் நிர்வாக சீர்திருத்த துறை அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பம் பெற்றது.
கடந்த 24.04.2017ல் இந்த காலியிடங்களை 22 ஆக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. அதன் பிறகு 2020 – 2021ம் ஆண்டுகளில் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பம் பெற்றும் காலியிடங்களை நிரப்பவில்லை.
தற்போது ஸ்டெனோகிராபர் கிரேடு-2 காலி பணியிடத்தை 35 ஆக இறுதி செய்து, நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நிர்வாக சீர்திருத்த துறை வரவேற்றுள்ளது.
இந்த காலியிடங்கள் பொது-15, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்-3, எம்.பி.சி.-6, எஸ்.சி.-5, ஓ.பி.சி.-3, மீனவர்-1, முஸ்லிம்-1, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர்-1 என்ற இட ஒதுக்கீட்டு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் கீழ்நிலை கிரேடில் தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு டைப்ரைட்டிங்கில் கீழ்நிலை கிரேடில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆங்கில டைப்ரைட்டிங் உயர்நிலை கிரேடில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை, தகுந்த சான்றிதழ்களுடன், சார்பு செயலர், நிர்வாக சீர்திருத்த துறை, பணியாளர் சிறகம், தலைமைச் செயலகம், புதுச்சேரி-605001 என்ற முகவரிக்கு இம்மாதம் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
ஏற்கனவே கடந்த 2016, 2017, 2020, 2021 ஆண்டுகளில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.