கிறிஸ்துவ கல்வி நிறுவனம் – கருத்து நீக்கம்! கிறிஸ்துவ கல்வி நிறுவனங் களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றது என்ற கருத்து நீக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் உத்தரவு
இரு பாலரும் படிக்கும், கிறிஸ்துவக் கல்வி நிறுவனங்களில், பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் உணர்வு உள்ளது என்ற கருத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவக் கல்லுாரியில் படித்த 34 மாணவிகள், உதவிப் பேராசிரியர் சாமுவேல் டென்னிசன் மீது பாலியல் தொந்தரவு குறித்த புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து உதவிப் பேராசிரியர் சாமுவேல் டென்னிசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, கிறிஸ்துவ மிஷனரிகள் ஏதாவது ஒரு வழியில் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இரு பாலரும் படிக்கும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில், குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் பொதுவான உணர்வு உள்ளது.
கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் நல்ல கல்வியை வழங்கினாலும் அறநெறியை போதிப்பது என்பது ‘மில்லியன் டாலர்’ கேள்வியாக உள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தார்.
நீதிமன்றத்தின் இந்தக் கருத்து, பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது என்ற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்றது. பல ஆண்டுகளாக இந்துக்கள் மத்தியில் இருக்கக் கூடிய பொதுக் கருத்தை நீதிபதி வெளிப்படுத்தினார் என்று கருத்து தெரிவித்து வந்தனர் பலர். கிறிஸ்துவக் கல்வி நிறுவனங்களால் தங்கள் குழந்தைகளின் பண்பாடு சிதைக்கப் படுவது கண்டும், கல்வி என்ற ஒற்றை அம்சத்தின் காரணமாக பொறுத்துக் கொண்டிருந்த பெற்றோர் இதனை வரவேற்றனர்.
இந்நிலையில், இந்த வழக்குக்கும், நீதிபதியின் கருத்துக்கும் தொடர்பு இல்லை என கல்லூரி நிர்வாகம் தரப்பில் நீதிபதியிடம் முறையீடு செய்யப் பட்டது. இதை அடுத்து, தனது கருத்தில் இருந்து நீதிபதி பின்வாங்கினார்.
இரு பாலரும் படிக்கும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில், பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் உணர்வு உள்ளது என்ற கருத்தும், கட்டாய மத மாற்றத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஈடுபடுகின்றன என்ற கருத்தையும் நீக்கிவிட்டு, நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.