தேர்தல் ஜனநாயக அரசியலில் அரசியல் கட்சிகள் அடிப்படைத் தூண்கள். அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சி கட்டமைப்பும், அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம் கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக் கொண்ட இருக்க வேண்டும். இது அடிப்படை அம்சம்!
இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி புதிய பாதையை வகுத்தது.
கட்சி கட்டமைப்பை ஆரோக்கியமாக வைத்திருந்தால் இரண்டாம் கட்ட தலைவர்கள் உருவாக காரணமாக அமைந்து விடும். அந்த தலைவர்களில் ஒருவர் தேசிய தலைமைக்கு சவாலாக வர வாய்ப்பும் இருக்கிறது!
நேரு குடும்ப வாரிசு இல்லாமல் கூட காங்கிரஸ் கட்சியால் இயங்க முடியும் என்ற சூழ்நிலை கூட தோன்றிவிடலாம். அப்படி ஒரு இக்கட்டான தருணம் வந்து விட்டக் கூடாது என்ற அக்கறையால் கட்சியின் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு அதன் அடிப்படைகளை சிதைத்தது.
சொந்த செல்வாக்கைக் கொண்டு தங்கள் தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாதவர்களை தேசிய அளவிலும் மாநிலங்களிலும் இரண்டாம் கட்ட தலைவர்களாக வைத்துக் கொண்டது. மாநில கட்சிகளின் பலவீனங்களை பயன்படுத்தி கூட்டணி மூலமே மத்தியில் ஆட்சியில் தொடரும் உத்தியை கையாண்டது!
கட்சி கட்டமைப்புக்கு பதிலாக வலிமை கொண்ட பல ஆதரவு வட்டாரங்களை வளர்த்துக் கொண்டது. அந்த வட்டாரங்களின் பட்டியல் நீளமானது!
*விசுவாசமான அதிகார வர்க்கம்!
*ஊடக முதலாளிகள் மற்றும் ஊடக பிரமுகர்கள்!
*வளைந்து கொடுக்கும் நீதித்துறை!
*அறிவுஜீவிகள் என்று முத்திரை குத்தப்பட்ட அடிமைகள்!
*அரசின் நிதி உதவியை பெறும் தொண்டு நிறுவனங்கள்!
*சோசலிசத்தின் பெயரால் தங்களை தியாக சீலர்களாக காட்டிக் கொள்ளும் இடதுசாரி ஆதரவாளர்கள்.!
*மதச்சார்பின்மை வேடம் அணிந்த போலி ஜனநாயகவாதிகள்!
*மேற்கத்திய இதயமும் இந்திய உடலும் கொண்ட பொருளாதார தற்குறிகள் !
*வரலாற்று ஆசிரியர்கள் & ஆய்வாளர்கள் என்ற பெயரில் இயங்கிய முழு மூடர்கள்!
*கல்வியாளர்கள், அறிஞர்கள் என்று பட்டியலிடப்பட்ட பெருச்சாளிகள்!
*முதலாளித்துவ முதலாளிகள்!
*வெளிநாட்டு ஆயுத உற்பத்தியாளர்கள்!
வெளிநாட்டு ஆட்சித் தலைமைகள்….. என்று நீண்டு விரிந்து பரந்து பட்ட ஆதரவு வட்டாரங்களைக் கொண்டு காங்கிரஸ் கட்சி என்கிற கோட்டை புதிதாக வடிவமைக்கப்பட்டது!
இந்த ஜாம்பவான்கள் காங்கிரஸ் கட்சியின் மேன்மை கருதி இணைந்தவர்கள் அல்லர்!
தனிமனித தேவைகள்! தனிமனித பேராசைகள்! தனிமனித சுயநலங்கள்! இவர்களின் ஆதரவுக்கு காரணமாக இருந்தது!
அந்த தேவைகளை நிறைவு செய்வது காங்கிரஸ் தலைமையின் வள்ளல் தன்மையாக இருந்தது! மக்களின் ஆதரவை பெற முடியாத
தலைவர்கள் காங்கிரஸ் கட்சி என்கிற மாபெரும் கோட்டையின்
அடிக்கற்களாக அமைத்தார்கள்! மற்றவர்கள் சுற்றுச் சுவர்களாகவும்
கூரையாகவும் அமைத்தார்கள்!
தேர்தல் ஜனநாயக அரசியலின் கூறுகள் நிர்வாகத்தின கூறுகளுக்கு
கட்டுப்பட்ட இரண்டாம் நிலை புனிதங்களாக மாற்றம் அடைந்து விட்டன! ஆனாலும் , இந்திய ஜனநாயகம் உலகின் உதாரணம் என்ற மாய பிம்பம் கட்டமைக்கப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தும் பட்டது!
நாடு அடைந்த நன்மைகள் அனைத்துக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமையை காரணமாக காட்டப்பட்டது!
தாழ்வுகளுக்கெல்லாம் மக்களே காரணம் என்ற தாழ்வு மனப்பான்மை
வளர்க்கப்பட்டது! ஒட்டுமொத்த சூழலும் ஒற்றைப் புள்ளியியல் அடக்கம் செய்யப்பட்டது!
காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு எந்த கட்சியாலும் ஆள முடியாத அளவுக்கு சிக்கல்கள் நிறைந்த நாடு இந்தியா! நேரு குடும்பத்தினர் தவிர வேறு எந்தவொரு தலைமையாலும் நிர்வகிக்க முடியாத நாடு இந்தியா என்ற மாயத் தோற்றத்தை கற்பிக்க இந்த பெரும்படை வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது!
2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டு கால மன்மோகன்சிங் ஆட்சியில் இரண்டு முறை நிதி அமைச்சராகவும் இடைப்பட்ட காலத்தில் உள்துறை அமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சி என்கிற கோட்டையின் ஆதார அடிக்கற்களில் முக்கியமான கல்லாக வடிவெடுத்தார்!
இப்போது அந்த ஆதார அடிக்கலைபிடுங்கி எறியும் முயற்சியின் தொடக்கம் மட்டுமே INXMedia வழக்கு!
ஒரு பெரிய கட்டிடத்தை தகர்க்க முதலில் ஒரு கல்லை பெயர்த்து எடுக்க வேண்டும்! ஆனால் அது தான் கடினமானது! சவாலானது! ஒரு கல்லை பெயர்த்து எடுத்து விட்டால் மற்ற கற்களை வெறுமனே தட்டினால் போதும் உதிர்ந்து விழும்! ப.சிதம்பரம் என்கிற வலிமையான அடிக்கல்லை மொத்தமாக பெயர்த்து எடுக்க இனி ஏராளமான வழக்குகள் வரலாம்!
2014 முதல் 2019 வரையிலான மோடியின் ஐந்து ஆண்டுகளில் இது ஏன் சாத்தியம் ஆகவில்லை?
2014 ல் மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் பெற்ற வெற்றியை ஒரு முறை நிகழ்ந்த அதிசயம் என்று காங்கிரஸ் கோட்டையின் அங்கங் களாகத் திகழும் அனைத்து பிரிவினரும் மனதார நம்பினார்கள்! அதனால் , மோடிக்கு அரசியல் அமைப்புச் சட்டம் அளித்து இருந்த அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்க முயன்றார்கள்!
2019 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வேறு உண்மையை உணர்த்தியது! பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த வெற்றி ஒரு அரசியல் கட்சிக்கான வெற்றி அல்ல; நாட்டின் பெரும்பான்மை சமுதாயம் தனக்கான ஆட்சியை தேர்வு செய்ய முடிவு செய்து விட்டது. அந்த முடிவுக்கு ஏற்ற கட்சியாக பாரதிய ஜனதா இருந்தது !
ஒரு அரசியல் கட்சியின் வெற்றி தோல்விகள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் மாறக் கூடும்! ஆனால் ஒரு சமுதாயத்தில் எழுந்து இருக்கும் எழுச்சி வடிய நீண்ட காலம் தேவைப்படும்!
2019 தேர்தல் முடிவுகள் மோடி எதிர்ப்பாளர்களுக்கு இந்த யதார்த்த நிலையை புரிய வைத்து விட்டது! அதனால் தான் பல அமைப்புகளிலும் மாற்றங்கள் தென்படத் துவங்கி இருக்கிறது!
மோடி எதிர்ப்பாளர்களில் சித்தாந்த ரீதியாக கொள்கை ரீதியாக கோட்பாடு ரீதியாக உறுதியாக நின்று எதிர்ப்பவர்கள் எத்தனை பேர்?
மொத்த எதிர்ப்பாளர்களில் ஒரு சதவீதம் இருந்தால் அதிகம்!
மற்ற மோடி எதிர்ப்பாளர்களும் காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவாளர்களும் சராசரி மனித சபலங்களுக்கு உட்பட்டவர்கள் தான். தங்களை காப்பாற்றிக் கொள்ள எதையும் தியாகம் செய்யத் துணியும் சாதாரண மனிதர்கள் தான்.
2024 ம் ஆண்டு தான் அடுத்த தேர்தல். அப்போது இவர்களின் வயது கூடிவிடும். 2024 ல் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்புகள் பற்றிய கணிப்புகள் இப்போது முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல! ஆனால், 2024 லும் கூட காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வரும் வாய்ப்பு மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது!
இது தான் சோர்வு தரும் – சமரசத்திற்குஆட்படுத்தும் – சஞ்சலங்கள் உட்படுத்தும் அச்சம்!
2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த மாபெரும் தோல்வியை விட ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியதும் அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் நிலவும் வரலாறு காணாத குழப்பங்களும் விபரீத விளைவுகளை உண்டாக்கி இருக்கிறது!
2024 தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக சிதைக்கப் படுமானால் அதில் ஆளும் கட்சியின் பங்கு — 50 சதவீதம்! காங்கிரஸ் தலைமையின் பங்கு–50 சதவீதம்!
- கட்டுரை: வசந்தன் பெருமாள்!