பாகிஸ்தானுடன் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவதற்கு இனி என்ன இருக்கிறது? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அவர்கள் ஒப்படைப்பது குறித்து மட்டுமே இனி பேச வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார்!
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சர்வதேச அமைப்புகளும் இந்த பிரச்சினையை எடுத்துச் சென்று வருகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பாகிஸ்தானுடன் காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இனி என்ன இருக்கிறது? அது இந்தியாவின் ஒரு பகுதி! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் மீண்டும் நம்மிடம் ஒப்படைப்பது குறித்து தான் இனி பேச வேண்டும்! இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு! போர்களை இந்தியா விரும்புவதில்லை!
இதுவரை எந்த நாட்டின் மீதும் தானாக இந்தியா போர் தொடுத்தது இல்லை! அதே நேரத்தில் மற்றவர்கள் நம் மீது தாக்குதல் நடத்த நினைத்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பதிலடி கொடுப்போம்!
நம்முடைய அண்டை நாடு பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிக்கும் பயிற்சி அளித்து வருகிறது! மனித குலத்துக்கு எதிராக செயல் படுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியவில்லை! இதனால் மிக விரைவில் தாங்கள் அழிவை சந்திக்க போகிறோம் என்பதும் அந்த நாட்டுக்கு தெரியவில்லை! என்று வெங்கைய நாயுடு பேசினார்!
இதனிடையே, இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே முழு முனைப்புடன் பெரிய அளவிலான போர் நடக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது பேசியுள்ளார்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அகமது பேசுகையில், காஷ்மீரை விடுவிப்பதற்கான கடைசி கட்ட போர் நடத்த நேரம் வந்து விட்டது. இம்முறை இந்தியாவுடன் நடக்கும் போர் முழு மூச்சுடனும், இறுதியானதாகவும் இருக்கும்!
காஷ்மீரில் இந்திய பிரதமர் மோடி பிரச்னையை உருவாக்குகிறார். இந்த அனைத்து பிரச்னைக்கும் காரணமான ‘ஹிட்லர்’ மோடி, காஷ்மீருக்காக போர் தொடுக்க நினைப்பதை நாங்கள் உணர்ந்து கொண்டு விட்டோம். காஷ்மீரின் விதியை காஷ்மீரி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்; ஐ.நா., அல்ல! காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தத்தான் ஐ.நா.,வால் முடியும்!
எங்கள் அதிர்ஷ்டம் காஷ்மீர் பிரச்னையில் எங்கள் பக்கம் சீனா போன்ற நாடு உறுதுணையாக உள்ளது! மற்ற சர்வதேச அமைப்புக்கள் இதில் மௌனம் காக்கின்றன. இந்தியா கடந்தும் தாம் ஆதிக்கம் செலுத்த பாகிஸ்தான் மட்டுமே தடையாக இருப்பதாக மோடி நினைக்கிறார். அதனால் தான் அவர் காஷ்மீரை அழிக்கப் பார்க்கிறார் என்று பேசினார்.