இரண்டு இந்திய பள்ளிச் சிறுவர்கள், புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நடியா கொமனேசியின் கவனத்தை தங்கள் ஜிம்னாஸ்டிக் திறமையால் ஈர்த்து இன்று பெரும் வெளிச்சத்துக்கு வந்துள்ளனர்!
சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்ட இந்த வீடியோ, ஒரு சிறுவனும் சிறுமியும் ஒரு சாதாரண தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென வெளிப்படுத்திய சில பெரிய சாமர்சால்ட் மற்றும் கார்ட்வீலிங் நகர்வுகளைக் காட்டியது.
ஐந்து முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர் – 1976 மாண்ட்ரீல் ஒலிம்பிக்கில் பெர்ஃபெக்ட் 10ல் விருது பெற்ற முதல் ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை நாடியா கோமனேசி! அவர், இந்தக் குழந்தைகளின் நம்பமுடியாத அபாரத் திறனைக் கண்டு வியந்து, இது மிக மிக அருமை என்று பாராட்டி, டிவிட் செய்துள்ளார்.
இதை அடுத்து, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜுவும் நாடியா கோமனேசியின் ட்வீட்டைப் பகிர்ந்து கொண்டார், இதனைத் தானே ட்வீட் செய்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். இந்தக் குழந்தைகளை தனக்கு அறிமுகப்படுத்தவும் ரிஜிஜு தனது டிவிட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
“Nadiacomaneci10 இதை ட்வீட் செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்! 1976 மாண்ட்ரீல் ஒலிம்பிக்கில் பெர்ஃபெக்ட் 10 பெற்ற முதல் ஜிம்னாஸ்ட்! பின்னர், மூன்று தங்கப் பதக்கங்களை வெல்ல மேலும் ஆறு பெர்ஃபெக்ட் 10 களைப் பெற்றார், இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தக் குழந்தைகளை அறிமுகப்படுத்த நான் கேட்டுக் கொண்டுள்ளேன் – என்று தனது டிவிட்டர் பதிவில் பதில் அளித்துள்ளார்.
இதை அடுத்து, இந்தப் பதிவுகளுக்கு பல்வேறு தரப்பினரும் பதில் கொடுத்துக் கொண்டுள்ளனர்.
பழைய இந்தியாவில், அமைச்சர்களைச் சந்திக்க மக்கள் அணுகினர்! ஆனால் பல முயற்சிகள் செய்தபோதிலும் தோல்வியடைந்தனர். ஆனால் புதிய இந்தியாவில், அமைச்சர்கள் மக்களுக்கான வசதிகளை வழங்க மக்களை தேடித் தேடி அணுகுகின்றனர். என்ன ஒரு வித்தியாசம் !!! – என்று ஒருவர் ஆச்சரியப் பட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் மக்கள் உங்களை ஏதோ வெறுமனே டாக் செய்து கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்; வேண்டுகோள் விடுக்கிறார்கள் என்றுதான் நான் நினைத்தேன்! இவற்றால் என்ன ஆகப் போகிறது என்றும் நினைத்தேன். ஆனால், அரசுத் துறையின் வேகத்தைக் கண்டு உண்மையில் ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் இருக்கிறது… என்று ஆச்சரியப் படுகிறார் ஒருவர்.
அரசாங்கத்தில் பொது மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் அணுக முடியாத 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சகாப்தத்திலிருந்து நாங்கள் இப்போது வெளியே வந்திருக்கிறோம்! என்று பதில் அளித்துள்ளார் ஒருவர்.
நாகாலாந்தில் உள்ள சுமுகெடிமா அரசுப் பள்ளி.. என்று ஒருவர் இந்த வீடியோ பதிவுக்கான பள்ளி குறித்து கருத்துப் பதிவு செய்திருக்கிறார்.!
இந்த வீடியோ இரு வாரங்களுக்கு முன் பிரபலமானது. அப்போதே, நாடியா இது குறித்து பதிவு செய்யும் முன்னதாகவே, கிரன் ரிஜிஜு பதில் அளித்திருக்கிறார் என்று கூறுகின்றனர்.
தயவுசெய்து இந்தச் சிறுவர்களை உடனே கண்டறிந்து பயிற்சி கொடுங்கள். 2024க்கு அவர்கள் தேவைப்படுவார்கள்.! என்கிறார் ஒருவர்.
இந்த இரு இளந்தளிர்களும் நமது #FitIndiaMovement பிட் இந்தியா இயக்கத்துக்கு சரியான தூதர்கள்!
இந்தியாவுக்கான விளையாட்டு தங்கப் பதக்க வேட்டை நடத்தும் வீரர்கள் வீராங்கனைகள் கிராமப் புறங்களில்தான் உள்ளனர். தாலுகா அளவில், மாவட்ட அளவில்.. ஒரே ஒரு பிரச்னை, நாம் தான் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும்! இது போன்ற திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்! கிரன் ரிஜுஜு போன்ற மிகவும் சுறுசுறுப்பான அமைச்சர்கள் நம் கிராமங்களின் திறமைகளை சர்வதேச அளவுக்குக் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்பலாம்…