எனக்கு 74 வயதாகிறது தயவு செய்து திஹார் சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள்; என்ன கடுமையான கட்டுப்பாடுகளையும் ஏற்க தயார் என ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை என்ற பெயரில் கதறியிருக்கிறார்.
எனக்கு 74 வயது ஆகிறது. என்னை திகார் சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள்; அதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுங்கள் என்று சிதம்பரம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு, சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப் பட்டு, சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப் பட்டு வருகிறார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்!
ப.சிதம்பரம் பின்னர் ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருமுறை ஏற்கெனவே சிபிஐ காவல் நீட்டிக்கப் பட்டது.
அப்போது ப.சிதம்பரத்தை விசாரிக்க மேலும் 5 நாட்கள் சிபிஐ காவலை நீட்டிக்க சிபிஐ கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் “சிபிஐ காவலுக்கு எதிராக நாங்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் செப்.2-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை நான் சிபிஐ காவலிலேயே இருக்கிறேன்” என ப.சிதம்பரம் தரப்பு கூறியது.
சிதம்பரத்தின் வேண்டுகோளை ஏற்று அவர் செப்.2-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்றுடன் காவல் முடிவடைந்து அவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத் துறை முன்ஜாமீன் வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுகிறது. எனவே செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்களுக்கு சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் தர வேண்டும்… இல்லாவிட்டால் கடும் நிபந்தனைகளுடன் கூடிய வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போது ப. சிதம்பரம், எனக்கு 74 வயதாகிறது. இந்த வழக்கை ஒத்திவைத்தால் நான் திகார் சிறைக்கு செல்ல நேரிடும். தயவு செய்து என்னை திகார் சிறைக்கு அனுப்பி விடாதீர்கள் என கெஞ்சினார் ப.சிதம்பரம்!
அவரது கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், வரும் 5-ஆம் தேதி வரை ப. சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்பக் கூடாது. அவர் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்யும் மனுவை கீழமை நீதிமன்றங்கள் உடனடியாக விசாரிக்க வேண்டும்.
ஒரு வேளை ஜாமீன் கிடைக்காவிட்டால் செப்.5-ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைக்கலாம் என உத்தரவிட்டனர்.
எனவே, அடுத்த 3 நாட்கள் திகார் சிறைக்குச் செல்வதில் இருந்து தற்காலிகமாகத் தப்பியுள்ளார் ப.சிதம்பரம்.